மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். பிசிசிஐ சிறப்பான ஒரு சம்பவத்தை செய்திருப்பதாகவும் கம்பீர் இந்திய அணியை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இலங்கை அணிக்கு எதிரான வீரர்கள் தேர்வில் பிசிசிஐ மோசமாக நடந்து கொண்டதாகவும் இதற்கு கம்பீர் தான் காரணம் என்றும் ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். எனினும் மற்றொரு தரப்பினர் கம்பீர் எந்த வீரர் சரிப்பட்டு வருவார் என்று நினைத்தாரோ அவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போல் இந்தியா அணியும் வெற்றி நடை போடும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் கம்பீரை விட வேறு ஒரு நபர் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கம்பீரின் நெருங்கிய நண்பரான அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இன்னும் சொல்ல போனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஒட்டு மொத்த ரசிகர்களும் கம்பீரை தூக்கிக் கொண்டாடினார்கள். ஆனால் அபிஷேக் நாயர் தான் இந்த அணியை கட்டமைத்து வீரர்களுக்கு உறுதுணையாக இருந்ததாக கேகேஆர் அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியிருந்தார்.
அபிஷேக் நாயரின் மிகவும் முக்கியமான பண்பு இளம் வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் வெற்றி பெற வைக்க முயற்சி செய்வதுதான். அபிஷேக் நாயர் தன் காலத்தில் மிக திறமையான வீரராக அறியப்பட்டாலும், அவருக்கு போதிய அளவில் இந்திய அணியின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அபிஷேக் நாயர், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்து விளங்க முக்கிய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்.
திறமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு துணை நின்று வெற்றி பெற வைப்பதற்கு அபிஷேக் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இதனால் அபிஷேக் நாயர் போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு வருவது அணியில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் ஆகும். பயிற்சியாளர் அனுபவம், வீரராக சர்வதேச கிரிக்கெட் அனுபவம், உள்நாட்டு கிரிக்கெட் அனுபவம் என அனைத்துமே அபிஷேக் நாயருக்கு இருப்பதால் நிச்சயம் இவருடைய வழிகாட்டுதலில் பல வீரர்கள் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.