மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் களத்தில் எவ்வளவு அமைதியான வீரர் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஜென்டில்மேன் கேம் என்ற சொல்லுக்கு ஏற்ற ஒரு வீரராக ராகுல் டிராவிட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது தமது தோற்றத்திற்கு நேர்மாறாக பேசியதாக கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா தற்போது தெரிவித்திருக்கிறார். இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2018 ஆம் ஆண்டு செயல்பட்டார்.

அப்போது இந்திய அணி அண்டர் 19 உலககோப்பையை வென்று அசத்தியது. அந்த தொடரின் போது ராகுல் டிராவிட் தங்களிடம் ஆக்ரோஷமாக பேசியதாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். இதில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஆசிய கோப்பை நடைபெற்றது. இதில் நாங்கள் வங்கதேசத்திடம் தோல்வியை தழுவினோம்.அதன் பிறகு உலக கோப்பையில் நாங்கள் வங்கதேசத்தை எதிர்கொண்டோம்.
அப்போது ராகுல் டிராவிட் எங்களிடம் வங்கதேச வீரர்கள் அத்துமீறி நடந்தால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டாம். நீங்களும் திருப்பி அடியுங்கள் என்று கூறினார். டிராவிட்டா இப்படி பேசுவது என்று நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம். டிராவிட இப்படி சொன்னவுடன் நாங்கள் அனைவரும் கடும் உத்வேகம் அடைந்து வங்கதேசத்துக்கு திருப்பிக் கொடுக்க தயாராக இருந்தோம்
என்று அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.
இதேபோன்று யுவராஜ் நட்பு குறித்து பேசிய அபிஷேக் ஷர்மா, எனக்கு 16 வயது இருந்த போது ரஞ்சி போட்டியில் முதல் முறையாக யுவராஜ் சிங்கை நான் பார்த்தேன். யுவராஜ் அந்தத் தொடரில் ரஞ்சியில் விளையாடினார். அந்த தொடரில் 800 ரன்களுக்கு மேல் அடித்தார் என்று நினைக்கின்றேன். அவர் எப்போதுமே என்னுடைய குருநாதர் தான். அவரைப் பார்த்துதான் நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங் ஆடியது எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்தது. யுவராஜ் போல் பேட்டிங் பந்துவீச்சு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதுதான் யுவராஜ் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம்.
முதலில் நான் யுவராஜை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அதன் பிறகு களத்தில் அவருடன் பேட்டிங் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பந்து வீசும் போது எதிரணி பேட்ஸ்மேனை வெறுப்பேற்றி பேசினேன். இதனால் நான் பேட்டிங் செய்யும்போது அந்த பவுலர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். இதை நான் யுவராஜுடன் கூறினேன். அவர் அந்த வீரரை கடுமையாக திட்டினார்.நான் பேட்டிங் விளையாடும் ஸ்டைலை பார்த்து, இந்த பையன் தாம் மாதிரி விளையாடுகிறான் என்பதை யுவராஜ் கண்டுபிடித்தார்.
அதன் பிறகு என்னை அவர் கண்காணிக்க தொடங்கினார்.களத்திற்கு வெளியேவும், களத்திலும் எப்படி நடைபெற வேண்டும் என யுவராஜ் கூறிய அறிவுரைகள் எல்லாம் எனக்கு தற்போது உதவிகரமாக இருக்கின்றது.நான் இந்திய அணிக்கு விளையாட தொடங்கியும் யுவராஜ் என்னிடம் தொடர்பில் தான் இருக்கின்றார். யுவராஜின் தந்தையும் நான் என்ன செய்கிறேன் என்று பார்த்து கொண்டு தான் இருப்பார். என்னுடன் இணைந்து அவரும் பயிற்சி செய்வார் என்று அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.