கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி டை ஆனதை அடுத்து இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அர்ஷ்தீப் சிங் பந்தை தடுத்து ஆடாமல் ஷாட் அடிக்க முயன்றதால் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் அவர் பந்தை தடுத்து ஆடியிருந்தால் அடுத்த 14 பந்துகளில் ஏதேனும் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்று இருக்க முடியும்.
இந்த சம்பவம் 2017இல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷானன் கேப்ரியல் செய்தது போலவே இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டினர். இந்த இரண்டு சம்பவம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. 2017 பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பான சூழல் இருந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தது இன்னும் 7 பந்துகளை மட்டும் தடுத்து ஆடினால் போட்டியை டிரா செய்யலாம் என்ற நிலையில் இருந்தது.

மறுபுறம் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அப்போது பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் யாசிர் ஷா பந்து வீசினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் ஏற்கனவே 40 பந்துகளை சந்தித்து இருந்தார். அதனால், அனைவரும் அவர் மீது நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்த நிலையில் அவர் தேவையில்லாமல் அந்த பந்தை அடிக்க முயன்றார். ஆனால், யாசிர் ஷாவின் பந்து திரும்பி ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அப்போது, "கேப்ரியல் ஏன் இதை செய்தாய்?" என்ற வாசகம் சமூக வலைதளங்களில் பலராலும் கேட்கப்பட்டது.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சூழ்நிலையில் அர்ஷ்தீப் சிங் சிக்கி இருக்கிறார். இந்தியா - இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் ஷாட் அடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விக்கெட்டை தற்காத்து ஆட வேண்டும் என்ற நிலையில் தான் அர்ஷ்தீப் இருந்தார். ஆனால், களத்துக்கு வந்தவுடன் அசலங்கா வீசிய சுழற் பந்தை அடிக்க முயற்சி செய்து எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார் அர்ஷ்தீப் சிங். இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக் காட்டி ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை விமர்சித்து வருகின்றனர். "இவர் என்ன தோனியா, வந்தவுடன் சிக்ஸ் அடிப்பதற்கு?" என விளாசி வருகின்றனர்.