மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கவுதம் கம்பீரின் பிடிவாத குணம் பலராலும் விமர்சிக்கப்படும் சூழலில், இந்திய வீரர்களை எப்படி அணுகுவார் என்பதே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே பிசிசிஐ-யிடம் கூடுதல் அதிகாரங்களை கேட்டு பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இந்திய அணியின் தேர்விலும் கவுதம் கம்பீர் தலையிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின், இந்திய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் இருந்து சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்க தேர்வு குழு ஆலோசித்து வந்தது.

ஏனென்றால் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணியின் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. அதன்பின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வென்பதே கிடைக்காது. ஆனால் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஹோம் சீசன் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்சிஏவில் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்த விரும்பியுள்ளார். இதனிடையே ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றாலும், துலீப் டிராபி தொடரில் சீனியர் வீரர்களை பங்கேற்கவும் கம்பீர் மற்றும் தேர்வு குழு தரப்பில் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இது சீனியர் வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் இருக்கிறார். அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் கேப்டன் ரோகித் சர்மாவும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் கம்பீர் கேட்டு கொண்டதை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கூறப்படுகிறது.
இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடுவதில் இருந்து தங்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பிசிசிஐ-யிடம் கேட்டு கொண்டது தெரிய வந்துள்ளது. இதனால் கம்பீர் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே அவரின் செயல்பாடுகள் சீனியர் வீரர்களிடையே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.