பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டி20 தொடர் சஞ்சு சாம்சன் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இலங்கை டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயம் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் 2வது டி20 போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சஞ்சு சாம்சன் சொதப்புகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ரிஷப் பண்டை ஓய்வு செய்து, மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தனர். இம்முறை சஞ்சு சாம்சனுக்கு பிடித்த பேட்டிங் வரிசையான நம்பர் 3ல் களமிறக்கப்பட்டார். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தீக்சனாவின் ஸ்பின்னில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதிக எதிர்பார்ப்புடன் சஞ்சு சாம்சன் களம் புகுந்தார்.
விக்ரமசிங்கே வீசிய 3வது ஓவரில் சஞ்சு சாம்சன் முதல் 3 பந்துகளில் முதல் ரன்னை எடுக்க தீவிரமாக இருந்தார். ஆனால் சஞ்சு சாம்சனால் முதல் ரன்னை சேர்க்க முடியவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் பெரிய ஷாட் ஆடுவார் என்று எதிர்பார்த்து பந்தை கொஞ்சம் ஸ்லோவாக வீசினார். இதனை கவனிக்காத சஞ்சு சாம்சன் பேட்டை வேகமாக வீச, தாமதமாக வந்த பந்து சஞ்சு சாம்சனின் பேட்டில் பட்டு எட்ஜாகியது.
அதனை ஹசரங்கா சரியாக கேட்ச் பிடிக்க, மீண்டும் டக் அவுட்டாகி வெளியேறினார். ஏற்கனவே பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஆனால் சஞ்சு சாம்சன் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் டக் அவுட்டாகி விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
இதனால் இந்திய அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்திய அணி வாய்ப்பு கொடுக்குமா என்று பலரும் சஞ்சு சாம்சனை சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றனர்.