பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 58 ரன்களையும், ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 49 ரன்களையும் குவித்தனர்.
இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை குவித்தது. 10 ரன் ரேட்டில் இலங்கை அணி ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி பவுலர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

அப்போது சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் நிசாங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் குசால் பெரேராவும் 20 ரன்களில் வெளியேற, இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை குவித்திருந்தது. இதன்பின் 16வது ஓவரை வீச ஸ்பின்னரான ரவி பிஷ்னாய் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் கமிண்டு மெண்டிஸ் அடித்த ஷாட் பவுலரான ரவி பிஷ்னாய்-க்கு அருகில் சென்றது. அதனை கேட்ச் பிடிக்க முயன்ற ரவி பிஷ்னாய் ஒரு கையால் கிட்டத்தட்ட பிடித்துவிட்டார். ஆனால் கேட்ச் பிடித்துவிட்டு கீழே விழுந்த போது கையில் இருந்த பந்து எகிறியது. அதுமட்டுமல்லாமல் அந்த பந்து ரவி பிஷ்னாய் இடது கண்களுக்கு கீழ் பலமாக அடித்து சென்றது.
இதனால் ரவி பிஷ்னாய் கண்களுக்கு கீழ் உடனடியாக ரத்தம் வெளியேறியதால், பிட்சிலேயே கதறினார். முகத்தில் பந்து அடித்த வேகமும் கூடுதலாக இருந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டு உடனடியாக பிசியோ பிட்சிற்கு சென்றார். அதன்பின் ஐஸ் பேக் வைத்து கண்களுக்கு கீழ் சிகிச்சை வைத்த நிலையில், பேண்ட்-ஐட் ஒன்றை ஒட்டினார்.
அதன்பின் ரவி பிஷ்னாய் பார்வையில் பிரச்சனையில்லை என்பதை உறுதி செய்த பின், ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதன்பின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், கடைசி பந்தில் அசலங்காவின் விக்கெட்டை எடுத்து ரவி பிஷ்னாய் பதிலடி கொடுத்தார். ரவி பிஷ்னாயின் காயம் குறித்து ஆட்டம் முடிவடைந்த பின்னரே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.