லாகூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குறித்து முகமது ஷமி விமர்சித்து பேசி இருந்த நிலையில், அதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும், முகமது ஷமி இப்படி பேசினால் இனி கிரிக்கெட்டே ஆட முடியாமல் போய்விடும் என எச்சரித்து இருக்கிறார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் டி20 உலகக் கோப்பையில் பந்தை சேதப்படுத்தி ஸ்விங் செய்வதாக இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். அதேபோல, மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் இந்திய வீரர்கள் பந்தில் ஏதோ ஒரு கருவியை வைத்திருக்கலாம் என நம்ப முடியாத குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "இது போன்ற கார்ட்டூன் தனமான நடத்தைகள் வேறு எங்காவது வேண்டுமானால் நடக்கும்" என கூறியிருந்தார். அவர் இன்சமாம் உல் ஹக்கை குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை. எனினும், பாசித் அலி முகமது ஷமி, இன்சமாம் உல் ஹக்கை கார்ட்டூன் என விமர்சித்து இருப்பதாக தற்போது எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.
முகமது ஷமி குறித்து பாசித் அலி பேசுகையில், "இன்சமாமை கார்ட்டூன் என ஷமி கூறி இருப்பது சரியல்ல. இன்சமாம் உல் ஹக் எங்கள் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வழிநடத்தியவர். ஷமி அவர் பற்றி பேச தேர்வு செய்த வார்த்தை சரியானது அல்ல. அவரது வார்த்தை என்னை காயப்படுத்தி விட்டது" என்றார்.

மேலும், "இன்சமாம் உல் ஹக் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், அதை நல்ல விதமாக சொல்லுங்கள். அவர் மூத்த வீரர். அவருக்கு மரியாதை அளியுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் அழுது கொண்டுதான் இருப்பீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே, இதை செய்யாதீர்கள். இது எனது தனிப்பட்ட கோரிக்கையாகும்" என்றார்.
மேலும், "முகமது ஷமி அபத்தமான முறையில் பேசி வருகிறார். அவர் மூத்த வீரர்களை குறித்து அபத்தமாக பேசுகிறார். அவரது வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் மற்றவர்களிடம் எப்படி மரியாதையாக பேச வேண்டும் என கற்றுத் தரவில்லை" என்றார் பாசித் அலி.