பல்லேகேலே: தோற்க வேண்டிய போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்ததால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செயல்பாடுகள் குறித்து பிசிசிஐ மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றனர். அடுத்து இந்திய டி20 அணியை சரியாக வழி நடத்த வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது பிசிசிஐ. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்தார்.

டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை புறக்கணித்துவிட்டு அவர் இந்த முடிவை எடுத்தபோது பலருக்கும் இந்த முடிவு சரியானதுதானா? என்ற சந்தேகம் இருந்தது. எனினும், கவுதம் கம்பீர் மீது நம்பிக்கை வைத்து, இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டது பிசிசிஐ.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது. ஆனால், அதைக் காட்டிலும் மூன்றாவது டி20 போட்டியில் நடந்த விஷயங்கள் பிசிசிஐ-யை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 15 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இலங்கை அணி.
ஆனால், கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து வித்தியாசமான முடிவுகளை எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் எடுத்தால் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நிலையில் ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் அந்த இரண்டு ஓவர்களை வீசினார்கள்.
ரிங்கு சிங் மூன்று ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்களும் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். மேலும், இருவரும் சேர்ந்து 4 விக்கெட்களை வீழ்த்தி போட்டியை டை செய்தனர். அடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
தோல்வி அடைய வேண்டிய போட்டியில் பல புதிய முயற்சிகளை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றதை பார்த்து பிசிசிஐ அதிகாரிகள் உற்சாகத்தில் இருந்ததாகவும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவை பாராட்டித் தள்ளி உள்ளனர்.