மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு முதல் தொடர் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் துணைப் பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான தேடலில் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். இதுவரை கவுதம் கம்பீர் தரப்பில் மும்பையைச் சேர்ந்த முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த பரிந்துரை மட்டுமே பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்பின் பவுலிங் பயிற்சியாளராக முதல் வினய் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதனை பிசிசிஐ நிராகரித்த நிலையில், பின்னர் தமிழக முன்னாள் வீரர் பாலாஜியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதனை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளாத நிலையில், தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்க்கல் பெயரை கம்பீர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையையும் பிசிசிஐ நிராகரித்துள்ளது.
அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டென் டெஸ்காட்டே பெயர் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் ஜான்டி ரோட்ஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த இரண்டையும் மீண்டும் பிசிசிஐ நிராகரித்துள்ளது. கவுதம் கம்பீர் தரப்பில் அளிக்கப்பட்ட 6 பரிந்துரைகளில் 5 பரிந்துரைகள் பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது சிக்கலை உருவாக்கியுள்ளது.
இதற்கு இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ விரும்புவதே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி கேப்டனான போது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டார். அப்போது முதல் இந்திய அணியின் அனைத்து பயிற்சியாளர்களும் இந்தியர்களாகவே இருந்து வருகின்றனர்.
10 ஆண்டுகளில் இந்திய அணி மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், மீண்டும் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கொண்டு பிசிசிஐ விரும்பாதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணி வீரர்களின் தேர்வு குழப்பத்தில் உள்ள நிலையில், இன்னொரு பக்கம் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கான ஒரு குழுவை ஒருங்கிணைக்க முடியாமல் திண்டாடுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.