மும்பை : இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு பிசிசிஐ தேர்வு குழு செய்த சொதப்பல்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது இதில் பல தவறுகள் இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்களும் வல்லுநர்களும் சுட்டிக்காட்டினர்.
ஆனால் அதை எதையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக அஜித் அகார்கரும், கம்பீரும் கைக்கோர்த்து கொண்டு ஒரு மோசமான அணியை தேர்வு செய்தார்கள். அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலியின் ரோகித் சர்மாவும் வெளிநாட்டில் தங்கி இருந்தார்கள்.

விடுமுறையில் இருந்தவர்களை நீங்கள் இந்த தொடரில் பங்கேற்றுதான் ஆக வேண்டும் என வற்புறுத்தியதை அடுத்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் வந்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நாங்கள் இனி செப்டம்பர் மாதம் தான் விளையாடுகிறோம் என்ற மனநிலையில் இருந்தவர்களை அழைத்து விளையாடுங்கள் என்று கூப்பிட்டதே தவறுதான்.
தற்போது இரண்டு சீனியர் வீரர்களும் வந்தும் இலங்கை இடம் இந்தியா மண்ணை கவ்வி இருக்கிறது. இது இருவருக்குமே மிகப்பெரிய மானக்கேடான விஷயமாக இது பார்க்கப்படுகிறது. இதனால் இளம் வீரர்களை பயன்படுத்தி இந்தியா தோற்று இருந்தால் இது ஒரு பிரச்சினையாகவே ஆகி இருக்காது. குறிப்பாக வாய்ப்புக்காக ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் ஆகியோர் சேர்க்கப்படாமல் தேர்வு குழு மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. இதேபோன்று ஹர்ஷித் ரானா அணியில் இருந்தும் அவருக்கு பிளேயிங் லெவனின் வாய்ப்பு கொடுக்காமல் போனது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
தேர்வு குழு செய்த இந்த குளறுபடியால் தான் இந்திய அணி தோற்று இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனியாவது சாக்கு போக்கு சொல்லாமல் சுழற் பந்து வீச்சை நன்றாக எதிர்கொள்ளும் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.