கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளதால், பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்போதும் இடது மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்களை கொண்டு பேட்டிங் ஆர்டரை கட்டமைக்க விரும்புபவர். கேகேஆர் அணியின் பேட்டிங் ஆர்டரையும் அப்படிதான் கட்டமைத்து கோப்பையை வென்றார்.

இதனால் தொடக்க வீரராக ஜெஸ்வால் - கில் களமிறங்கினால் நம்பர் 3 வரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் நம்பர் 4ல் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. முதல் விக்கெட்டாக யார் ஆட்டமிழக்கிறார்கள் என்பதை பொறுத்து பேட்டிங் வரிசையையும் மாற்றப்படலாம். இதனிடையே நேற்றைய பயிற்சியின் போது சஞ்சு சாம்சன் அதிக நேரம் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் சஞ்சு சாம்சனுடன் அதிக நேரம் செலவிட்டு பயிற்சியளித்தார். இதனால் கவுதம் கம்பீர் ரிஷப் பண்ட்-ஐ விடவும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இலங்கை மண்ணில் சஞ்சு சாம்சன் அதிகளவிலான போட்டிகளில் விளையாடியதில்லை. ஆசியப் போட்டிகளில் கூட பேக் அப் விக்கெட் கீப்பராக அழைக்கப்பட்டு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால் ஸ்பின்னுக்கு சாதகமான பாலக்கலே பிட்சில் சஞ்சு சாம்சன் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் தீக்சனா என்று 2 தரமான ஸ்பின்னர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஏற்கனவே ஹசரங்காவிற்கு எதிராக 11 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு சாம்சன் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2023ஆம் ஆண்டுக்கு பின் பவர் பிளே ஓவர்களில் தீக்சனாவின் எகனாமி ரேட் 7 ரன்களுக்கு கீழாக உள்ளது. இதனால் ஸ்பின் கண்டத்தில் இருந்து சஞ்சு சாம்சன் தப்பிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்பின்னர்களை நன்றாக அட்டாக் செய்யக் கூடிய பேட்ஸ்மேன் என்றாலும், மிஸ்ட்ரி ஸ்பின்னர்களிடம் சஞ்சு சாம்சன் திணறி இருப்பது குறிப்பிடத்தக்கது.