கொழும்பு : இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியதால், அந்த அணியில் கேப்டனாக இருந்த ஹசரங்கா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கை டி20 அணியில் புதிய கேப்டனாக சாரித் அசலங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். அசலங்கா ஏற்கனவே வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இலங்கை அணியின் அண்டர் 19 கேப்டன் ஆகவும் விளங்கி இருக்கிறார்.

தற்போது நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாப்னா கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார். இதன் காரணமாக அசலங்காவுக்கு டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.இதேபோன்று இலங்கை அணியின் அனுபவ வீரரான தினேஷ் சந்திமால் நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 257 ரன்கள் குவித்தார்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 168 ஆகும். இதன் காரணமாக சந்திமாலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று எல்பிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இலங்கை அணி பேட்ஸ்மேன் தனஞ்செய் டிசில்வா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் தில்சான் மதுசங்கா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மதுசங்கா 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எனினும் நடப்பாண்டில் அவர் பெரிய அளவில் எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. நடப்பு lpl தொடரில் கூட ஆறு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் மதுசங்கா நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டிருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நடப்பு எல்பிஎல் தொடரில் 8 போட்டியில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எக்கனாமி வெறும் 6.81 தான். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று எல்பிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய குசல் பெரேரா, அவிஸ்கா பெர்னான்டோ ஆகியோரும் இலங்கை டி20 அணிக்கு திரும்ப இருக்கிறார்கள். இதேபோன்று பதூம் நிஷாங்கா, குசேல் மெண்டிஸ், கமிண்டூ மெண்டிஸ், தசுன் சனாகா, துணித் வெல்லாலகே, ஹசரங்கா, சிஎஸ்கே வீரர்கள் தீக்ஷனா, பதிராணா ஆகியோரும் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது.