கொழும்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரால் தான் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் தனது இடத்தை இழக்கப் போகிறார் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முக்கியமான ஒருநாள் தொடரான சாம்பியன்ஸ் ட்ராபியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பதே கடினம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் வரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது அந்த பதவியை இழந்து இருக்கிறார். மேலும் டி20 அணியில் ஒரு ஆல் ரவுண்டராக மட்டுமே அவர் செயல்பட இருக்கிறார். இந்த சரிவை யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்து அவரை ஒரு நாள் அணியில் இருந்தும் நீக்க பின்னணியில் காய் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் டி20 அணி மற்றும் ஒரு நாள் அணியில் வேகப்பந்து வீசும் திறன் கொண்ட ஆல் ரவுண்டரான சிவம் ய்துபே சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் இருந்து விலக்கு பெற்றுள்ள நிலையில், அவர் டி20 அணியில் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்.
இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் முக்கிய தகவல் ஒன்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியால் பட்டை தீட்டப்பட்ட சிவம் துபேவுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், யாரும் எதிர்பாராத வகையில் அவர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டதற்கும் அதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.
சிவம் துபே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழக்க நேரிடும். அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவதும் சந்தேகம்தான்.
ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் ஒரு கண்டமும் உள்ளது. அவர் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் ஒரே போட்டியில் 10 ஓவர்களும் வீசுகிறாரா? என்பதை பார்த்து, அவரது உடற் தகுதியை சோதித்த பின்னரே அவரை இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா பாதி தொடரில் காயத்தில் சிக்கி வெளியேறினார். அப்போது இந்திய அணி வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இல்லாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அது போன்ற ஒரு நிலை சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் இந்த சிக்கலான நிலையால் சிவம் துபேவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் தனது ஃபார்மை நிரூபிக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.