இலங்கை தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு நல்ல விசயம்.. இது வரப்பிரசாதம்,இனி கவலையில்லை.. அஜய் ஜடேஜா
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கலின் சிறப்பான, நிலையான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், இடதுகை பேட்டரான படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராகவோ அல்லது 3-வது வரிசையிலோ களம் இறங்க முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, மாற்று வீரராக கடைசி நேரத்தில் அணியில் இணைந்த படிக்கலின் செயல்பாடு குறித்து சோனி ஸ்போர்ட்ஸ் தளத்தில் நடந்த விவாதத்தில் ஜடேஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "படிக்கல் சிறந்த ஷாட்களை ஆடியது மட்டுமின்றி, களத்தில் தனது நிதானமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். அவர் பெரிய ஸ்கோர்களை எடுத்தார்."

"தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நீங்கள் கூறியது போல, அவருக்கு கடைசி நேரத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் அவர் சில சவால்களைச் சந்தித்து, இருமுறை அவரது கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்ட போதிலும், மீண்டும் தனது கவனத்தைக் குவித்து சதம் அடித்தார்," என்று கூறினார்.
"சில நேரங்களில் வீரர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை நழுவ விடுவார்கள். அந்த கேட்ச்கள் அவர் சதம் அடித்த பிறகும் தவறவிடப்பட்டன, ஆனால் அந்த வாய்ப்புகளுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். தனக்கு 3-வது வரிசை வழங்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து தனக்குக் கவலையில்லை என்று அவரே கூறியுள்ளார். அவர் அணியின் தேவையைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆட்டக்காரர். அவரால் தொடக்க வீரராகவும் விளையாட முடியும், 3-வது வரிசையிலும் விளையாட முடியும்," என்று ஜடேஜா கூறினார்.
"அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஒரு வீரரை விரும்பும்போது அல்லது அவரிடம் ஏதேனும் தனித்துவத்தைக் காணும்போது, அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. நான் கடந்த நான்கு ஆண்டுகளாக அவருடைய ரசிகனாக உள்ளேன். அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே நான் அவரது ரசிகன். இன்றைய காலகட்டத்தில் பவர் ஹிட்டர் இல்லாமல், கிளாசிக் முறையில் விளையாடும் ஒரு அரிய வீரர் அவர்," என்று கூறினார்.
"இந்திய அணியின் பார்வையில் பார்த்தால், அனைத்து வீரர்களும் சிறந்தவர்களே. ஆனால், சிலருக்கு வேகப்பந்து மற்றும் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வது பலமாக இருக்கும், சிலருக்கு ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வது பலமாக இருக்கும். இந்தியாவில் நடைபெற்ற கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு, நம் பேட்டர்களால் ஸ்பின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ள முடியாததே முக்கிய காரணம். எனவே, இந்த இடத்தில் படிக்கலின் வருகை இந்திய அணிக்கு ஒரு பெரிய பலமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஐந்து போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், இது இந்திய அணிக்கு ஒரு நல்ல அறிகுறி," என ஜடேஜா கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

