IND vs SL: தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 2வது சதம்.. சச்சின், புஜாரா பட்டியலில் இணைந்து ரெக்கார்ட்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், சச்சின் டெண்டுல்கர் போன்ற முன்னணி இந்திய பேட்டர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கர்நாடகாவை சேர்ந்த இடதுகை பேட்டரான தேவ்தத் படிக்கல் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அவர், கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் ஒரு சதம் அடித்து அசத்தினார்.

26 வயதான படிக்கல், 168 பந்துகளில் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.இலங்கை மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை படிக்கல் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.
முன்னதாக, 1993-ல் வினோத் காம்ப்ளி கொழும்பில் நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் முறையே 125 மற்றும் 120 ரன்கள் விளாசி இந்த சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, 1997-ல் சச்சின் டெண்டுல்கர் 143 மற்றும் 139 ரன்கள் மற்றும் முகமது அசாருதீன் 126 மற்றும் 108* ரன்கள் ஆகிய இருவரும் கொழும்பில் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர்.
இதேபோல், ஷிகர் தவான் காலே மைதானத்தில் 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் விளையாடிய அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் முறையே 134 மற்றும் 190 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். சேதேஷ்வர் புஜாரா 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை மண்ணில் அடுத்தடுத்து மூன்று சதங்களை 145*, 153 மற்றும் 133 ரன்கள் விளாசி அசத்தினார். தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ள தேவ்தத் படிக்கல், காலேயில் நடைபெற்ற போட்டியில் 167 ரன்களும், கொழும்பு போட்டியில் ஆட்டமிழக்காமல் 100* ரன்களும் எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications

