தொடர் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2 - 0 என வெற்றி பெற்றது. இந்த டி20 தொடரில் துவக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
அதிரடி ஆட்டம்
தவான் பார்ம் இழந்து இருந்த நிலையில், அவர் அதிரடியாக ஆடி ரன் குவித்தால் மட்டுமே இனி அணியில் தொடர முடியும் என்ற நிலையில் துவக்க வீரராக இந்த தொடரில் சேர்க்கப்பட்டார்.
ஸ்ட்ரைக் ரேட் குறைவு
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் போட்டியில் 143 ரன்களை சேஸ் செய்தது இந்தியா. அந்தப் போட்டியில் தவான் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ரன் எடுத்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்த கவலை தொடர்ந்தது.
அவசரப்பட்ட தவான்
இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மட்டுமே அவருக்கு இருந்த கடைசி வாய்ப்பாக இருந்தது. அதனால் அந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது தவான் அடித்து ஆட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்.
கேட்ச் வாய்ப்பு
அவர் சந்தித்த முதல் 10 பந்துகளில் ஏறி அடிக்க முயற்சி செய்து தொடர்ந்து தோல்வி அடைந்தார். இரண்டாவது ஓவரில் ஒரு முறை கேட்ச் வாய்ப்பில் தப்பினார். பல முறை அடித்து ஆட முயற்சி செய்து, பதற்றத்தில் இருந்த தவான் அதன் பின்னரே தன் இயல்பான ஆட்டத்தை ஆடினார்.
அரைசதம் கடந்தார்
முடிவில் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த அவர் 15 டி20 இன்னிங்க்ஸ்கள் கழித்து தன் முதல் அரைசதத்தை எட்டினார். 2019ஆம் ஆண்டில் அவர் டி20யில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்மை நிரூபித்தார்
தடுமாறினாலும், முடிவில் தன் பார்மை நிரூபித்த தவான், அணியில் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். எனினும், கேப்டன் கோலிக்கு இது சிக்கலான விஷயமாக மாறி உள்ளது.
கோலிக்கு சிக்கல்
ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் தங்களின் சிறப்பான பார்மில் இருக்கும் நிலையில், தவானுக்கும் அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் அவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே இந்த சிக்கல் ஆரம்பம் ஆக உள்ளது.