IND vs SL: அதிரடி காட்டிய துருவ் ஜூரல்.. ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து கேட்ச் பிடித்த இலங்கை கேப்டன்
காலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, துருவ் ஜூரலை ஆட்டமிழக்கச் செய்ய இலங்கை அணியின் கேப்டன் தனஞ்சய டி சில்வா ஒரு அற்புதமாக பாய்ந்து ஒற்றைக் கை கேட்ச்சை பிடித்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 110-வது ஓவரின் முதல் பந்தில் இந்த விக்கெட் வீழ்ந்தது.
பிரபாத் ஜெயசூர்யா வீசிய பந்தை, ஜூரல் ஆன்-சைடு திசையில் தட்டிவிட முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டின் leading edge பட்டு காற்றில் எம்பியது. அப்போது ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த தனஞ்சய டி சில்வா, தனது வலதுபுறமாக முழுவதுமாக பாய்ந்து ஒரு கையில் அசாத்திய கேட்ச்சை பிடித்தார்.

ஆனால், சில ஓவர்களுக்கு முன் துருவ் ஜூரல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தனஞ்சய டி சில்வா தவறவிட்ட நிலையில், மீண்டும் தனது தவறை சரி செய்தார். வலது கை பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் 68 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு பயனுள்ள இன்னிங்ஸை விளையாடினார். இவரது ஆட்டமிழப்பிற்குப் பிறகு, இந்திய அணி 109.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 432 ரன்கள் எடுத்திருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த இந்திய அணிக்கு, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். எனினும், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுபுறம் கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக (retired hurt) தற்காலிகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
கேப்டன் சுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது படிக்கல் 131 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 27 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, ரிஷப் பந்த் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் மீண்டும் களம் புகுந்த கே.எல். ராகுல் மேலும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து, 82 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், 230 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 167 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுக்கு வெளியேறினார்.
இறுதி கட்டத்தில் துருவ் ஜூரல் 51 ரன்களும், மானவ் சுதர் 24 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் அடிப்படையில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தற்போது குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும், பிரசித் கிருஷ்ணா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications

