மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு முக்கிய அரசியல் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்திய கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி வரும் பிசிசிஐ அமைப்பின் தலைவராக, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவர் பிசிசிஐ தலைவராக இருந்தார்.
அதன் பின் பாஜக ஆட்சி வந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தின் மீது இருந்த வழக்குகள் காரணமாக அந்த அமைப்பு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதே காலகட்டத்தில், இந்திய அணி உலகின் வலுவான அணிகளில் ஒன்றாகவும், தொடர்ந்து உலகக் கோப்பை இறுதி போட்டி வரை முன்னேறியதாலும் இந்த நிர்வாகத்தின் மீது இதுவரை எந்தக் விமர்சனமும் இல்லை.

இந்த நிலையில், 2025இல் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுடன் ஜெய் ஷாவின் பிசிசிஐ செயலாளர் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது. அதன் பின் மூன்று ஆண்டுகள் அவர் எந்த பிசிசிஐ பதவியிலும் இருக்க முடியாது. எனவே, அந்த கால கட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பார் என கூறப்படுகிறது. 2028 வரை அவர் ஐசிசி தலைவராக இருக்க முடியும்.
ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டால் பிசிசிஐ-இன் செயல்பாடுகளிலோ, இந்திய அணியின் செயல்பாடுகளிலோ அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயல்படுவது சாத்தியம் இல்லை. இந்த நிலையில் தான், இரண்டு உலகக் கோப்பைகள் வென்று கொடுத்த முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கம்பீர் 2019 முதல் 2024 வரை பாஜக கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவர் அரசியலில் இருந்து விலகினார். பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டை நெருக்கமாக நிர்வகிக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்ற ஊகங்கள் எழுந்து இருக்கின்றன.
தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளை, இந்திய அரசின் வெற்றிகளாக முன்னிறுத்தவே இத்தனை நெருக்கமாக இந்திய கிரிக்கெட் அணியை கண்காணித்து, வழிநடத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அடுத்து 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அப்போது இந்திய மண்ணில் இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதே தற்போதைய திட்டமாக இருகிறது. அதே போல 2025இல் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியிலும் இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்ற திட்டமும் உள்ளது.
முன்பு 2023 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்தபோது இந்திய அணி அதில் வெற்றி பெறவில்லை. அது போன்று மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதும் அதே சமயம் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு சென்று விட்டால், அந்த நேரத்தில் இந்திய அணியை நெருக்கமாக இருந்து வழிநடத்தும் வகையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கலாம்.