கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 - 0 என கைப்பற்றியதை அடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் அடுத்து நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு முன் வீரர்கள் முழு உடற் தகுதியுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கும் வகையில் பேசினார்.
இதை அடுத்து அவர் ஹர்திக் பாண்டியாவை தான் எச்சரித்து பேசுகிறார் என சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவின. ஆனால், அவர் ஹர்திக் பாண்டியாவை மட்டும் சொல்லவில்லை, வேறு சில இந்திய வீரர்களையும் சேர்த்து தான் எச்சரித்து இருக்கிறார் என விளக்கம் கூறப்படுகிறது.

தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பின் ஒரு மாத காலத்திற்கு இந்திய அணி எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை.
அதன் பின் செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்ற சில வீரர்கள் ஒரு நாள் அணியில் இடம்பெறப் போவதில்லை. அவர்கள் ஒரு மாத ஓய்வுக்கு பின் வங்கதேச தொடரில் தான் அணிக்கு திரும்ப உள்ளனர்.
அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க போவதில்லை. இந்த நிலையில், கவுதம் கம்பீர் பேசுகையில், "சில வீரர்கள் ஒரு நாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும். வங்கதேச தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது அவர்களது திறமை மற்றும் உடற் தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும். அந்தத் தொடருக்கு நீங்கள் நேரடியாக வந்து, "நாம் சிறப்பாக செயல்படலாம்" என்று மட்டும் நினைக்காதீர்கள். எனவே, நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்." என எச்சரிக்கும் வகையில் பேசி இருந்தார்.
இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவை தான் கம்பீர் இப்படி எச்சரிக்கிறார் என்ற கருத்து பரவியது. முன்னதாக ஹர்திக் பாண்டியா இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒரு நாள் தொடரில் விடுப்பு கேட்டிருந்தார். அவர் அடுத்து நேரடியாக வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்.
எனவே, அவரைத்தான் கவுதம் கம்பீர் குறிப்பிடுகிறார் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், கவுதம் கம்பீர் வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடரில், ஒரு நாள் அணியில் இடம் பெறாத சில டி20 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ரவி பிஷ்னோய், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக் ஆகியோரும் இந்த பட்டியலில் வருவார்கள்.
வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி, மற்ற வீரர்களையும் சேர்த்து தான் கவுதம் கம்பீர் கூறி இருக்கிறார் எனவும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ கவுதம் கம்பீர் இந்திய வீரர்களை எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.