மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 24 ரன்களிலும், 2வது ஒருநாள் போட்டியில் 14 ரன்களிலும், கடைசி ஒருநாள் போட்டியில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிராக ஆடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 58 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் விராட் கோலியின் கதை ஓவர் என்று பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் இனி விராட் கோலியால் தப்பிக்க முடியாது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தனது நண்பர் விராட் கோலியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்த பிட்சில் விளையாடுவது எளிதான விஷயமல்ல. முதலில் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். அது விராட் கோலியாக இருந்தாலும் சரி.. ரோஹித் சர்மாவாக இருந்தாலும் சரி.. யாராக இருந்தாலும் சரி.
செமி நியூ பாலில், 8 முதல் 30 ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது சாதாரண விஷயமே கிடையாது. அதனால் விராட் கோலியின் ஆட்டத்தை நினைத்து கவலைக் கொள்ள தேவையில்லை. உலகில் இதுபோன்ற பிட்ச்கள் அதிகம் கிடையாது. நான் ஒன்றும் விராட் கோலியின் ஆட்டத்தை சிறப்பானது என்று சொல்லப் போவதில்லை. ஆனால் ஸ்பின்னர்களை எதிர்த்து அந்த பிட்சில் விளையாடுவது எளிதல்ல என்றே சொல்வதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலேயே விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாட தடுமாறி வந்தார். ஒரு கட்டத்தில் அட்டாக் செய்தால் மட்டுமே தப்ப முடியும் என்று தெரிய வந்த பின், வேறு வழியின்றி ஸ்பின்னர்களுக்கு எதிராக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். அப்போதும் கூட ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை கொடுப்பதில் விராட் கோலி இதேபோன்றே செயல்பட்டு வந்தார்.
இதனால் விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தனக்கென்று ஒரு ஸ்டைலை கண்டறிய வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்த போதே, விராட் கோலியால் ஸ்பின்னர்கள் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை. இதனால் கம்பீர் மூலம் விராட் கோலி சிக்கலுக்கு விடையை கண்டறிவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.