மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீர் தமது பயிற்சியாளர் குழுவில் வெளிநாட்டு வீரரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்னே மார்க்கல் வேண்டும் என்று பிசிசிஐயிடம் வலியுறுத்தி இருந்தார்.அது மட்டுமல்லாமல் பேட்டிங் துணை பயிற்சியாளராக நெதர்லாந்து வீரர் டென் டேஷ்சோட்சே வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிசிசிஐ கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு வீரர்களை பயிற்சியாளர் குழுவில் சேர்க்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கம்பீரின் வலியுறுத்தலால் பிசிசிஐ அதற்கு பச்சை கொடி காட்டிவிட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் குறித்து கம்பீர் கடுமையாக விமர்சித்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், இந்திய கிரிக்கெட்டில் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. அது என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணியை தற்போது இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளர்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியை ஒரு இந்தியரால் மட்டுமே பயிற்சி கொடுக்க வேண்டும். இந்த கருத்தில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன்.
இந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் அவர்கள் இங்கு வந்து பணத்தை சம்பாதித்து விட்டு காணாமல் போய் விடுகிறார்கள். விளையாட்டில் எப்போதுமே உணர்ச்சிகள் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் தொடர்பாக ஒரு இந்தியனால் மட்டுமே அந்த உணர்ச்சியை கொண்டு வர முடியும்.
ஏனென்றால் ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி, அணில் கும்ப்ளே போன்ற வீரர்கள் எல்லாம் இந்திய நாட்டுக்காக விளையாடுகிறார்கள். எனவே இந்த நடைமுறையை பிசிசிஐ தொடர வேண்டும். நீங்கள் டிராவிட்டிடம் கேட்டுப் பாருங்கள் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதும், பணியாற்றுவதும் எவ்வளவு சிறந்தது என்று அவருடைய பேச்சிலிருந்து உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
நான் ஒரு இந்திய பயிற்சியாளருக்கு கீழ் விளையாடவில்லையே என்ற ஒரு வருத்தம் இருக்கிறது என்று கம்பீர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசி இருக்கிறார். இந்திய பயிற்சியாளர் தான் வேண்டும் என்று பேசிய கம்பீர தற்போது வெளிநாட்டு பயிற்சியாளர்களை வர வைத்திருப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.