IND vs SL: தோனியால் கூட இந்த அணியில் இடம்பெற முடியாது.. வசீம் ஜாபர் கருத்து
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வசீம் ஜாஃபர் தனது சிறந்த ஆசிய டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், இந்த அணிக்கு யாரை கேப்டன் மற்றும் துணைக் கேப்டனாக நியமிப்பீர்கள் என்ற கேள்விக்கு வசீம் ஜாஃபர் பதிலளித்தார்.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற கேப்டனும் ஆல்-ரவுண்டருமான இம்ரான் கானை கேப்டனாக அவர் தேர்வு செய்தார். அதே சமயம், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஆச்சரியப்படும் விதமாக துணைக் கேப்டனாகத் தேர்வு செய்தார்.

முழுமையான 11 வீரர்கள் கொண்ட அணியை அவர் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ். தோனி தனது அணியில் இடம்பெற மாட்டார் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இம்ரான் கான் கேப்டனாக இருப்பார். எனது துணைக் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். தோனி இந்த அணியில் இடம் பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார். சச்சின் சிறந்த துணைக் கேப்டனாக இருப்பார்" என்று தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான தற்போதைய தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 69 பந்துகளில் 66 ரன்களும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 89 பந்துகளில் 63 ரன்களும் குவித்தார்.
தோனி தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 90 போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியுடன் 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் உட்பட 4876 ரன்கள் எடுத்துள்ளார். இதில் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில், 32.48 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 18 அரைசதங்கள் உட்பட 2496 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
தற்போது, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம், வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற . தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
வெறும் 36 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட், 6 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2534 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2500 ரன்களைக் கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications

