முதல் டி20 போட்டி
இந்தியா - இலங்கை இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற இருந்தது. இது அந்த மைதானத்தில் நடைபெற இருந்த மூன்றாவது சர்வதேச போட்டி.
டாஸ் போடப்பட்டது
இந்தப் போட்டியில் மழை பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான அறிகுறிகள் டாஸ் போடும் போது தெரியவில்லை. எனினும், டாஸ் போடப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மழை கொட்டியது.
மழையால் பாதிப்பு
நீண்ட நேரம் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் உறைகள் கொண்டு மைதானம் மூடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்ற பின் மழை நின்றது.
அவுட் பீல்டில் சிக்கல் இல்லை
அப்போது மழை நீரை மைதானத்தில் இருந்து வெளியேற்றும் வேலையில் ஈடுபட்டனர் ஊழியர்கள். அவுட் பீல்டில் தான் அதிக நீர் இருக்கும் என்பதால் அங்கே சிறப்பாக செயல்பட்டு மழை நீரை வெளியேற்றினர்.
போட்டி கைவிடப்பட்டது
ஆனால், எதிர்பாராவிதமாக மூடப்பட்டு இருந்த பிட்ச்சில் மழை நீர் அதிகமாக இறங்கி இருந்தது. அதை வெளியேற்றினால் தான் போட்டி நடைபெறும் என அம்பயர்கள் கூறினர். எனினும், ஊழியர்களால் மழைநீரை வெளியேற்ற முடியவில்லை. இதையடுத்து போட்டி கைவிடப்பட்டது.
கடும் விமர்சனம்
போட்டி கைவிடப்பட்டதால், கவுஹாத்தி மைதான ஊழியர்கள் மற்றும் பிட்ச் சீரமைப்பாளர் ஆகியோர் மீது விமர்சனம் எழுந்தது. மழை வந்தால் எப்படி முறையாக அந்த சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்று தெரியாமல் அவர்கள் தடுமாறியதை பலரும் விமர்சித்தனர்.
புகார் அளிக்கப்பட்டது
மழை பெய்த போது பிட்ச்சை மூட பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் உறையில் ஓட்டைகள் இருந்ததால் தான் மழை நீர் உள்ளே சென்றது என்ற புகாரும் கூறப்பட்டது. அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலாளர் அறிக்கை
முதல் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏன் அப்படி நடந்தது என்பது குறித்து இந்திய அணி மேலாளர் பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் சோப்பர்
அந்த அறிக்கையில், பிளாஸ்டிக் உறைகள் ஓட்டையாக இருப்பதை கூட தெரிந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும், சூப்பர் சோப்பர் இயந்திரத்தை அந்த ஓட்டையான உறையின் மீது இயக்கி உள்ளனர்.
புதிய ஊழியர்கள்
உறையின் மேல் உள்ள மழை நீரை வெளியேற்ற அவர்கள் இப்படி செய்தாலும், இதனால் மழை நீர் அதிகமாக பிட்ச்சில் இறங்கி இருக்கிறது. கவுஹாத்தி மைதான ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் தான் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் அவ்வாறு செய்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் சீரமைப்பாளர் எங்கே?
முன்னாள் பிட்ச் சீரமைப்பாளரை உட்பூசல் காரணமாக வேலையில் இருந்து அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய குழு, விழிப்புணர்வு இன்றி சொதப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.