முதல் டெஸ்ட்டில் இலங்கையை தவிக்க விட்ட இந்திய அணி.. மழைக்கு நடுவே ஆதிக்கம்.. தேவ்தத் சதம்
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்து இருந்தது. தேவ்தத் படிக்கல் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். சில ஓவர்கள் மழையால் தடைபட்ட நிலையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
காலே சர்வதேச மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இதை அடுத்து 3வது வரிசையில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ராகுல் 162 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்திருந்த போது, கைகளில் ஏற்பட்ட கடுமையான தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து இலங்கை சுழற்பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த தேவ்தத் படிக்கல் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் படிக்கல் 178 பந்துகளில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நீடிக்கிறார்.
இதனிடையே 4வது வரிசையில் வந்த கேப்டன் சுப்மன் கில் 28 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூர்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து இருந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வலுவான நிலையில் உள்ள இந்திய அணி, 2வது நாள் ஆட்டத்தில் 500 ரன்களுக்கும் மேல் குவிக்கும் திட்டத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications
