மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். இதன்பின் இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வு குழு இன்று கூடவுள்ளது. அதற்கு முன்பாக இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வு குழுவினர் முடிவு செய்யவுள்ளனர். ஏனென்றால் 2026 டி20 உலகக்கோப்பை இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை மட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரின் போதும் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் செயல்பட்டு வந்தார். ஏற்கனவே இந்திய அணியை 16 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரின் கேப்டனாக ஒரு கோப்பையை வென்றுள்ளார். இதனால் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் இந்திய அணி நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் களமிறங்கினார். இந்திய அணிக்காக ஆடிய போட்டிகள் என்று பார்த்தால் உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 உலகக்கோப்பையில் தான் ஹர்திக் பாண்டியா விளையாடினார்.
இதனால் இந்திய அணியை நிரந்தரமாக வழிநடத்தக் கூடிய கேப்டனை நியமிக்க தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் விரும்பியுள்ளனர். கேஎல் ராகுல் இந்திய டி20 அணியில் இனி இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை. இதனால் சூர்யகுமார் யாதவை கேப்டன் பொறுப்புக்கு கொண்டு வர இரு தரப்பும் ஆலோசித்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதில், 2026 டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணி விளையாடும் அனைத்து டி20 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா விளையாட தயாராக இருந்தால் மட்டுமே கேப்டன்சி அளிக்க முன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் இரு வீரர்களும் தங்களின் கருத்தினை கூறியுள்ளனர். இதனால் கேப்டன் யார் என்பது குறித்த இறுதி முடிவு தேர்வுக் குழு ஆலோசனை கூட்டத்தில் இன்று எடுக்கப்படவுள்ளது.