மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த தொடருடன் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள கவுதம் கம்பீர் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதனிடையே 3 நாட்களுக்கு முன் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதன் மூலமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபிட்னஸ் பிரச்சனையை கூறி, சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் கொண்டு வரப்பட்டுள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 வடிவங்களுக்குமான சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில்லை இந்திய அணி நிர்வாகம் கட்டமைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் ரியான் பராக் எதற்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்பதும், சிவம் துபே ஒருநாள் போட்டிகளில் என்ன காரணத்திற்காக கொண்டு வரப்பட்டார் என்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நாளை மாலை புறப்படவுள்ளனர். டி20 கிரிக்கெட் தொடர் பாலக்கலேவிலும், ஒருநாள் தொடர் கொழும்பு மைதானத்திலும் நடக்கவுள்ளன.
நாளை புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்களின் தேர்வு தொடர்புடைய கேள்விக்கு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் இணைந்து நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து பதிலளிக்க உள்ளனர். இதனால் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.