மும்பை: இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், தனது கவனத்தை டெஸ்ட் கிரிக்கெட் மீதும் திருப்பியுள்ளார். ஏனென்றால் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்து சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதேபோல் நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
பார்டர் - கவாஸ்கர் டிராபி இம்முறை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தோல்வியடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது எளிதாக இருக்காது. இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றிபெற வேண்டும் என்பதில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார்.

அதற்கு முன்பாக சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் தரமான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பின்னடைவாக உள்ளது. இந்த ஓட்டையை அடைக்க கவுதம் கம்பீர் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாகவே கலீல் அஹ்மத்தை இலங்கை தொடரில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
அதேபோல் அர்ஷ்தீங் சிங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி அர்ஷ்தீப் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இவரின் ரிவர்ஸ் ஸ்விங் பாகிஸ்தான் ஜாம்பவான்களையே சந்தேகம் கொள்ள வைத்தது.
அப்போதே வாசிம் அக்ரம் உள்ளிட்ட வீரர்கள், அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பின் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள துலீப் டிராபி தொடரில் விளையாட அர்ஷ்தீப் சிங் அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ரெட் பாலை அர்ஷ்தீப் சிங் எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க கம்பீர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் லக்னோ அணிக்காக விளையாடி வரும் மோசின் கான் மீது தேர்வுக் குழுவினர் கண் வைத்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு வீரர் நடராஜன் கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அசத்தினார். அவரை தேர்வு செய்வதில் தேர்வு குழு, பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்டோர் ஆர்வம் காட்டாதது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.