மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் முன்னணி வீரர்களை கையாள்வதில் மிகவும் கறாராக நடந்து கொள்ள முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் அவரை எச்சரித்து இருக்கிறார்.
ராகுல் டிராவிட் கூட பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட புதிதில் செல்வாக்கு மிக்க இந்திய வீரர்களை அணுகுவதில் தடுமாறினார் எனவும், பின்னர் எப்படி லாவகமாக இந்திய வீரர்களுடன் பேச வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டார் எனவும் கூறி இருக்கிறார். இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் பலரும் நூறு கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக பல கோடிகளை சம்பளமாக பெற்று வந்து இருக்கின்றனர். அது மட்டும் இன்றி விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலமாக ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர பதிவை வெளியிடுவதற்கு மட்டுமே பல கோடிகளை சம்பளமாக பெறுகிறார்கள்.
இந்திய அணியில் இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு மேல் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனி பிம்பத்துடன் உள்ளனர். மறுபுறம் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோசத்துடன், கறாராகவும் இருக்கக்கூடியவர்.
தான் பதவியேற்ற முதல் தொடரிலேயே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் தொடரில் விளையாடிய ஆக வேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்தி இருக்கிறார். 2024 டி20 உலக கோப்பைக்கு பின் சில மாதங்கள் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என கோலி மற்றும் ரோஹித் கருதிய நிலையில், கவுதம் கம்பீர் அவர்களுக்கு ஓய்வு அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், கம்பீரின் அணுகுமுறை குறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் எச்சரித்து இருக்கிறார். இது குறித்து அந்த அதிகாரி பேசுகையில், "இந்திய வீரர்களை கையாள்வது எளிதான விஷயம் இல்லை. ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளர்கள் தான் அங்கே முதன்மையானவர். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை தான் வீரர்கள் செய்ய வேண்டும். ஆனால், அது இந்திய அணியில் வேலை செய்யாது." என்றார்.
மேலும், "இந்திய அணியை பொறுத்த வரையில் நீங்கள் ஃபோனை எடுத்து ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியாக பேச வேண்டும். ராகுல் டிராவிட் அந்த விஷயத்தை மிகச் சரியாக செய்தார். டிராவிட் கூட பயிற்சியாளராக சேர்ந்த புதிதில் இதை செய்வதற்கு தடுமாறினார். அவர் விளையாடிய காலத்துக்கும், தற்போதைய காலத்துக்கும் கிரிக்கெட்டில் நிறைய விஷயங்கள் மாறி இருந்தது. அது அவருக்கு தடுமாற்றத்தை அளித்தது. பின்னர் அதை அவர் அதை சரியாக கையாண்டார். தற்போது இந்திய அணியில் ஒவ்வொருவரும் பெரும் கோடீஸ்வரர்கள். ஐபிஎல் அணியில் அவர்கள் ஒவ்வொருவரும் கேப்டனாகவும் இருக்கிறார்கள். அதுதான் கவுதம் கம்பீரின் மிகப்பெரிய சவால். வீரர்களை அவர் கவனமாக கையாள வேண்டும்." என்றார்.