மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவி ஏற்றுள்ள நிலையில் , அவருடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து கம்பீரின் சிறு வயது பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, லக்னோ அணிகளுக்கு மென்டராக இருந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் கௌதம் கம்பீர் தற்போது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீரின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ், கம்பீரிடம் எந்த வீரர் சிறப்பாக விளையாடுவார் என்பதை கூர்ந்து கவனிக்கும் திறமை இருப்பதாக பாராட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கௌதம் கம்பீரின் பேட்டிங்கால் தான் இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது.
ஒரு வீரராக இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பை வெல்ல உதவிகரமாக இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கேகேஆர் அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்திருக்கிறார். கௌதம் கம்பீருக்கு நீங்கள் எந்த சவால்களை கொடுத்தாலும் அதனை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவதில் வல்லவர். அவர் எப்போதுமே தமக்கு கொடுத்த பணியை நேர்மையுடன் செய்வார்.
நாடு அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் அவர் காப்பாற்றுவார். தற்போது உள்ள இந்திய அணியில் கௌதம் கம்பீர் வளர்த்த குல்தீப் யாதவ், நவதீப் சைனி ஆகிய வீரர்களை அவர் சேர்க்க வேண்டும். இரு வீரர்களும் கம்பீரின் பட்டறையில் தான் வளர்ந்தார்கள். இதேபோன்று சுனில் நரைன், ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கியதற்கு காரணம் கௌதம் தம்பி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைதான். இதனால் தான் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுழில் நரை சிறப்பாக செயல்பட்டார்.