மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததற்கு முக்கிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெய்ஷாவின் தந்தை அமித்ஷா பாஜகவின் பெரும்புள்ளி மற்றும் மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார்.
கம்பீர் பாஜகவில் எம்பி பதவியில் இருந்தார். இந்த நிலையில் கம்பீருக்கு ஜெய்ஷாவின் நட்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விஷயமாக கருதப்படுகிறது. இதனால் ஜெய்ஷாவின் அழைப்பில் தான் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவே பதவி ஏற்றிருக்கிறார்.

இந்த சூழலில் தமக்கு எந்தெந்த பயிற்சியாளர்கள் வேண்டும் என்று கம்பீர் பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதனை பிசிசிஐ ஏற்கவில்லை என்ற செய்தி வெளியானது. குறிப்பாக பந்துவீச்சு பயிற்சியாளர் விஷயத்தில் ஜெயிஷாவுக்கும் கம்பீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த கம்பீர், நான் போட்ட கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டதால் தானே வந்தேன் இப்போது நான் கேட்ட பயிற்சியாளர் தரவில்லை என்றால் எப்படி என்று கேள்வி எழுப்பினார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஜெய்ஷா உடனான நட்பு குறித்தும் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கம்பீர், எனக்கும் ஜெய்ஷாவுக்கும் மிகச் சிறப்பான ஒரு நட்பு இருக்கிறது. இது இன்று நேற்று அல்ல! பல ஆண்டுகளாக நாங்கள் நட்பில் இருக்கின்றோம். இந்த சூழலில் பயிற்சியாளர் விவகாரத்தில் நானும் ஜெயிஷாவும் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.
இந்த செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு பதிலாக நாங்கள் வேறு ஒரு சிறந்த விஷயங்களை செய்ய கவனம் செலுத்தலாம். நாங்கள் இதுவரை நல்ல நட்புடன் இருந்திருக்கிறோம். அந்த நட்பு அதே போல் தொடரும் என்று நான் நம்புகிறேன். கம்பீரும் முக்கியமான நபர் கிடையாது. என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் தான் மிகவும் முக்கியம்.
நானும் சரி ஜெய்ஷாவும் சரி அனைவரும் இந்திய கிரிக்கெட் முன்னேற வேண்டும் என்று தான் உழைத்து வருகின்றோம். எங்களுடைய குறிக்கோளை நோக்கி நாங்கள் ஒருமித்த கருத்துடன் முன்னேறி செல்வோம் என்று கம்பீர் கூறியுள்ளார். இதனால் பயிற்சியாளர் விஷயத்தில் நிச்சயம் கம்பீருக்கும் ஜெய்ஷாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதனை சமாளிக்கவே கம்பீர் இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.