மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு முன்னாள் இந்திய வீரரும், தற்போது ஆடிவரும் இந்திய வீரரும் ஆடுகளத்தில் ஒருவருக்கு ஒருவர் கை கலப்பில் ஈடுபடுவது போல மோதிக்கொண்ட சம்பவம் ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. அதை செய்தது கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி. அந்த இருவரும் 2023 ஐபிஎல் தொடரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர் கோலியுடன் கடும் வாக்குவாதம் செய்தார். அதற்கு முன்பு விராட் கோலி லக்னோ அணி வீரர்களை கடுமையாக திட்டி இருந்தார். அதனால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனால் அவர்கள் இருவரும் எதிரிகள் என்ற ஒரு பார்வை அனைவருக்கும் உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் விராட் கோலி விளையாட இருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையேயான உறவு தற்போது எப்படி இருக்கிறது? அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இது உங்களது டிஆர்பிக்கு மிகவும் நல்ல செய்தி. ஆனால், எனது உறவு என்பது பொதுவெளியில் சொல்ல வேண்டிய விஷயம் அல்ல. எனக்கும் விராட் கோலிக்கும் என்ன மாதிரியான உறவு உள்ளது என்பதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருவரும் முதிர்ச்சி அடைந்த மனிதர்கள். ஆடுகளத்தில் ஒவ்வொரு வீரரும் தனது அணிக்காக போராடி வெற்றி பெற வேண்டிய உரிமையை பெற்று இருக்கிறார்." என்றார்.
மேலும், "ஆனால், இப்போது நாங்கள் இந்திய அணிக்காக, 140 கோடி இந்தியர்களுக்காக ஒன்றாக விளையாட இருக்கிறோம். நாங்கள் இப்போது ஒரே அணியில், ஒரே மன நிலையில் இருக்க வேண்டும். இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். நான் எப்போதும் விராட் கோலியுடன் ஆடுகளத்துக்கு வெளியே நல்ல உறவை வைத்துக் கொண்டு இருக்கிறேன். அது எப்போதும் தொடரும். ஆனால், எங்களுடைய உறவு எத்தகையது என்பதை என்னால் பொதுவெளியில் சொல்ல முடியாது. அது இரண்டு தனி மனிதர்களுக்கு இடையே ஆனது." என்றார் கம்பீர்.
மேலும், "நான் அவருடன் குறுஞ்செய்திகள் மூலம் நிறைய பேசியிருக்கிறேன். நான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்பும் நிறைய பேசி இருக்கிறேன். ஆனால், நாங்கள் இப்போது இந்தியாவை பெருமைப் படுத்துவதற்காக கடுமையாக உழைக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அதுதான் எங்கள் வேலை. நாங்கள் என்ன பேசிக் கொண்டோம் என்பது முக்கியமல்ல. நான் அவருடன் எத்தனை முறை பேசினேன், பயிற்சியாளராக அறிவிக்கும் முன்பும், பின்பும் என்ன பேசினேன், ஒரு போட்டியின் போதும், போட்டிக்குப் பின்பும் நான் அவருடன் என்ன பேசினேன் என்பதெல்லாம் முக்கியமில்லை. சில சமயம் தலைப்புச் செய்திக்காக இதை எல்லாம் நாம் வெளியே சொல்ல முடியாது. இது முக்கியமானதும் அல்ல." என்றார் கவுதம் கம்பீர்.