கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது விருப்பத்திற்கு ஏற்ப நான்கு துணைப் பயிற்சியாளர்களை தேர்வு செய்து இருக்கிறார். ஆனால், தற்போது ஐந்தாவதாக அவர் மேலும் ஒரு பயிற்சியாளரை சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் கம்பீருடன் சேர்த்து இந்திய அணிக்கு மொத்தமாக ஆறு பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இத்தனை பயிற்சியாளர்கள் இருந்ததே இல்லை.
எனவே, இந்த விஷயத்தில் பிசிசிஐ குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மட்டுமே நியமிக்கப்பட்டார். அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பேட்டிங் பயிற்சியாளர், ஒரு பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளரை தேர்வு செய்வார் என கூறப்பட்டது.

ஆனால், அவர் நான்கு பயிற்சியாளர்கள் வேண்டும் என பிசிசிஐ- இடம் கூறினார். அதாவது இரண்டு துணைப் பயிற்சியாளர்கள் (அபிஷேக் நாயர், ரயன் டென் டோஷேட்), ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளர் (டி திலீப்), ஒரு பவுலிங் பயிற்சியாளர் (மோர்னே மோர்கல்) ஆகியோரை அவர் பிசிசிஐ-இடம் கேட்டு பெற்றார்.
தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மோர்னே மோர்கல் பங்கேற்கவில்லை. அவர் அடுத்து நடைபெற உள்ள வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியுடன் பயணிப்பார். தற்போது இலங்கை தொடருக்கு மட்டும் தற்காலிக பவுலிங் பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே ஆலோசனைகளை அளிக்க முடியும். அவர் பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி சுழற் பந்துவீச்சில் மிக மோசமாக செயல்பட்டது. அவருக்கு சுழற் பந்து வீச்சு குறித்து அதிக நுணுக்கங்கள் தெரியாது. சுழற் பந்துவீச்சாளர்களுக்கான திட்டத்தை அவரால் வகுக்க முடியாது.
அதே சமயம் தற்காலிக பவுலிங் பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே லெக் ஸ்பின்னராக இருந்தவர். அவர் உள்ளூர் அணிகளுக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டவர். எனவே, அவரை சுழற் பந்துவீச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சியாளராக நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கம்பீர் அவரை கூடுதல் பயிற்சியாளராக சேர்க்க வேண்டும் என பிசிசிஐ-இடம் கேட்கக் கூடும் என இந்திய அணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து பிசிசிஐ குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 11 பேர் விளையாடும் ஒரு அணிக்கு ஆறு பயிற்சியாளர்கள் தேவையா? என்பதே அவர்கள் முன் உள்ள கேள்வி. டெஸ்ட் தொடர்களுக்கு தான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை தேவை என்பதால் சாய்ராஜ் பஹுதுலே-வை பகுதி நேரமாக டெஸ்ட் தொடர்களுக்கு மட்டும் சுழற் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது.