பாலக்கலே : இந்தியா இலங்கை அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தங்களுடைய முதல் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். புதிய தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்று கொண்ட கம்பீர்,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்பார்வை செய்தார்.
டி20 உலக கோப்பையில் வென்ற சூரிய குமார், ஹர்திக் பாண்டியா, ஜெய்ஸ்வால் சஞ்சு சாம்சன், சிவம் துபே, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்று இருப்பதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களை கம்பீர் மேற்பார்வை செய்தது மட்டுமல்லாமல், அவர்களை அழைத்து சில அறிவுரைகளையும் வழங்கினார். இதில் அவர் முக்கியமாக கவனம் செலுத்தியது சஞ்சு சாம்சன் மீது தான். சஞ்சு சாம்சன் மீது கம்பீருக்கு நிச்சயம் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கும். ஏனென்றால் 2012 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வாங்கிய போது மிகவும் இளம் வீரராக சஞ்சு சாம்சன் அந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
எனினும் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லைஎன்றாலும் சாம்சனை அணிக்கு கொண்டு வந்து அவருடைய திறமையை வளர்த்ததில் கம்பீரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடி வீரராக இருந்தாலும் அவர் சில தவறுகளை செய்கின்றார். சாம்சன் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த், சாம்சனுக்கு பொறுமை கிடையாது.
சில நேரம் முதிர்ச்சியற்ற ஷாட்களை ஆடி ஆட்டம் இழந்து விடுவார் என்று கூறியுள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மையாகும். இதனால் தான் கம்பீர் சஞ்சு சாம்சனை அழைத்து அனைத்து பந்துகளையும் அடித்து ஆட தேவை இல்லை. கடினமான பந்துகளை தடுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு பாடம் எடுத்தார்.
பந்துகளை எப்படி தடுப்பது என கம்பீர் அவருக்கு செய்து காட்டினார். இதன் மூலம் ஆட்டம் இழக்காமல் களத்தில் அதிக நேரம் நின்று அதிக ரன்களை எடுக்க முடியும் என்றும் கம்பீர் அவரிடம் கூறினார். ஏற்கனவே அணியில் ரிஷப் பண்ட் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விராட் கோலி இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.