மும்பை : இந்திய டி20 அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு அந்த வாய்ப்பு சென்றது. இதனால் ஹர்திக் பாண்டியா ஏமாற்றம் அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு கௌதம் கம்பீர் பெரிய கௌரவம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்தது புதிய பயிற்சியாளரான கம்பீர்தான். இதற்கு அவர் அளித்த காரணம் பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் ஒரு பேட்ஸ்மேன் பயிற்சியாளராக இருப்பதற்கு சரியான தேர்வு என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால் இந்திய அணியில் சாதாரண வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவும் கம்பீரும் எவ்வாறு இணைந்து செயல்படுவார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு டி20 போட்டியில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு மூன்றாவது t20 போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என வென்ற நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூமில் கௌதம் கம்பீர் வீரர்களிடையே உரையாற்றினார். போர்குணத்துடன் வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார்.
எப்போதுமே பயிற்சியாளர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசும்போது ஒரு கேப்டனை தான் பேச அழைப்பார்கள். ஆனால் நேற்று கம்பீர், சூர்யகுமாரை அழைக்காமல் ஹர்திக் தற்போது உங்களிடம் உரையாற்றுவார் என்று கூறினார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஹர்திக் பாண்டியா இந்த கௌரவத்தை ஏற்றுக் கொண்டு பேசிய ஹர்திக், இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
நான் எப்போதுமே கீழ் வரிசை வீரர்களும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று கூறுவேன். அதற்கு ஏற்றார் போல் வாஷிங்டன் சுந்தரும் ரவி பிஷ்னாயும் நேற்று அடித்த ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று சூர்யகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான ஒரு முடிவு.
அதற்கு என்னுடைய சல்யூட். கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றெடுக்கின்றோம் என்று கூறினார். இந்திய அணியில் கேப்டன்சி பதவியால் வீரர்களுக்கு இடையே பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் கம்பீர் ஹர்திக் பாண்டியாவை சமாளிப்பதற்காக இந்த கௌரவத்தை நேற்று வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.