பாலக்கலே: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்து வருகிறது. மழைக் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்தார். மழை பெய்துள்ளதால், பிட்ச் நிச்சயம் ஸ்லோவாக இருக்கும் என்று டாஸின் போதே இரு அணிகளின் கேப்டன்களும் கூறியிருந்தனர்.
அதற்கேற்ப பவுலர்கள் வீசிய பந்து தொடக்கம் முதலே பேட்டிங்கிற்கு வருவதற்கு கூடுதல் நேரம் எடுத்தது. இதுபோன்ற சூழல்களில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக செட்டிலாகி ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் இந்திய வீரர்களோ பவுண்டரி, சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சாம்சன் டக் அவுட், ரிங்கு சிங் 1, சூர்யகுமார் 8 மற்றும் சிவம் துபே 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், இந்திய அணியின் பேட்டிங் லைன் - அப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்த மாற்றங்களே சரிவுக்கு காரணமாக அமைந்தது.
ஏனென்றால் கம்பீர், வலது - இடது காம்பினேஷனிலேயே பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். இதனால் வழக்கத்திற்கு மாறாக ரிங்கு சிங்கை நம்பர் 4 வரிசையிலும், சூர்யகுமார் யாதவை நம்பர் 5 வரிசையிலும் களமிறக்கினார். இது இந்திய அணிக்கு தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக மாறியது.
ஃபினிஷரான ரிங்கு சிங்கை எதற்காக நம்பர் 4 பேட்டிங் வரிசையில் பவர் பிளேவிலேயே கம்பீர் களமிறக்கினார் என்பதை இதுவரை புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் ஸ்பின்னர்களை வெளுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்டான சிவம் துபேவை பதுக்கி வைத்து 10 ஓவர்களுக்கு பின் களமிறக்காமல், பவர் பிளேவிலேயே களமிறக்கி தவறு செய்துள்ளார்.
ஏற்கனவே ரியான் பராக் பேட்டிங் வரிசையில் இருந்த போதும், அவரை களமிறக்காமல் ஏன் சிவம் துபேவை களமிறக்கினார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த பின் ஓய்வறைக்கு சென்ற நிலையில், முழுமையாக இந்திய அணியின் கட்டுப்பாடு கம்பீரின் கைகளில் இருப்பதாக பார்க்கப்பட்டது.