மும்பை : டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். ராகுல் டிராவிட் ஏற்கனவே உலகக்கோப்பை என்ற உச்சத்தை தொட்ட நிலையில் அதற்கு மேல் சாதனை படைத்தால்தான் அடுத்த பயிற்சியாளராக வந்த கம்பீருக்கு பெருமையாக இருக்கும்.
இதில் கொஞ்சம் சறுக்கினாலும் பெரும் இன்னல்களுக்கு கம்பீர் ஆளாக நேரிடும். நல்லா இருந்த அணியை கெடுத்து விட்டாரே என்ற பெயரும் கம்பீருக்கு சேர்ந்திருக்கும். இந்த நிலையில் கம்பீர் என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விடையாக அமைந்திருக்கிறது இந்தியா இலங்கை அணிக்கு இடையிலான டி20 தொடர்.

பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தாம் எவ்வாறு செயல்பட போகிறேன் என்று கம்பீர் சொன்னாரோ அதையே தான் இந்த தொடரிலும் செய்திருக்கிறார். வீரர்களுடன் நல்ல உறவை மேற்கொண்ட கம்பீர் அனைத்து வீரர்களுக்கும் சுதந்திரம் வழங்கி இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவுக்கு திட்டத்தை தீட்டி கொடுத்த கம்பீர், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும் கேப்டனாக நீ என்ன செய்கிறாயோ அதற்கு முழு ஆதரவை நான் தருவேன் என்று கம்பீர் முடிவு எடுத்திருப்பது களத்தில் நன்றாகவே தெரிந்தது. இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு பிரச்சனை நீடித்து வந்தது.
அதாவது சச்சின், யுவராஜ், சேவாக், ரெய்னா, கங்குலி போன்ற வீரர்களுக்கு நன்றாக பந்து வீசவும் தெரியும். ஆனால் அதன் பிறகு வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு பெரிய அளவில் பந்துவீச்சில் நாட்டமில்லை. வெறும் பேட்ஸ்மேன்களாக ஒரு தலைமுறை இருந்து விட்டது. இது இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கம்பீர் தலைமையேற்றதும் இருக்கிற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பந்து வீசவும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு தகுந்தார் போல் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரியான் பராக், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் பந்து வீசி இருக்கிறார்கள். பந்து வீசுவது மட்டும் இல்லாமல் முக்கியமான கட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் பயிற்சியில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதை போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறார். யாருமே யோசித்து செய்ய முடியாத ஒரு வேலையை அவர் செய்தார். 19 ஓவரை தாமும் வீசி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் கேப்டனாக சூரியகுமார் யாதவ் கை தேர்ந்திருக்கிறார்.
138 ரன்கள் என்பது மிகவும் குறைவான இலக்காக இருந்தாலும், வெற்றியை எப்போதுமே எதிரணிக்கு ஈசியாக விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் கம்பீர் அண்ட் கோ சிறப்பாகவே இருந்தது. முதல் தொடரிலேயே இலங்கை அணியை அவர்கள் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இருப்பதால் நிச்சயம் கம்பீருக்கு இது நல்ல தொடக்கமாக அமைந்தது மேலும் சூர்யகுமார் யாதவ் நல்ல கேப்டனாகவும் பெயர் எடுத்திருக்கிறார்.