பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 58 ரன்களை விளாசினார்.
இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 139 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் கொடுத்து சிறப்பாக ஆடி வந்த நிலையில், அடுத்த 31 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி சார்பில் கடைசி நேரத்தில் பவுலிங் செய்த ரியான் பராக் 8 பந்துகளை மட்டுமே வீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தார்.

இந்தப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கம்பீரின் பங்கு இருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. பலரும் வாஷிங்டன் சுந்தர் தான் விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில், திடீரென ரியான் பராக் களமிறங்குவதாக தெரிய வந்தது. இதன் மூலமாக இந்திய அணியின் பேட்டிங் வலிமையாக இருக்கும் என்றே பார்க்கப்பட்டது.
அதேபோல் ரியான் பராக் பேட்டிங்கில் சொதப்பினாலும், பவுலிங்கில் கில்லி என்று நிரூபித்துள்ளார். அதிலும் கடினமான 17 மற்றும் கடைசி ஓவரை வீசி தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை இந்திய ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். நீண்ட காலமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பலரும் பவுலிங் செய்யாமல் இருந்து வந்ததால், பவுலர்களை நம்பியே கேப்டன்கள் இருந்து வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா மீதான அழுத்தமும் அதிகமாக இருந்தது. அதனை மாற்றுவதற்காகவே ரியான் பராக்கை இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி தேர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் எதற்காக தேர்வு செய்யப்பட்டாரோ, அந்த திட்டத்தை முதல் போட்டியிலேயே சோதித்து இந்திய ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதன் மூலமாக கவுதம் கம்பீரின் திட்டம் சரியாக இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலமாக யுவராஜ் சிங் விட்டுச்சென்ற இடத்தை ஜடேஜாவை வைத்து நிரப்ப இந்திய அணி முயன்று வந்தது. சில நேரங்களில் ஜடேஜா சிறப்பாக விளையாடினாலும், பேட்டிங்கில் இன்னும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை ரியான் பராக் செய்து முடிப்பார் என்று ரசிகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.