மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பயிற்சியில் முதல்முறையாக களமிறங்கவுள்ளது. இதற்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய தகுதி வாய்ந்த ஏராளமான வீரர்கள் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் முகேஷ் குமார் 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரின் ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலும் ஆவேஷ் கான் இடம்பெற்றிருந்தார். நல்ல வேகமும், பவுன்ஸும் ஆவேஷ் கானிடம் இருப்பதால், எந்த நேரத்திலும் எந்த பேட்ஸ்மேனையும் அச்சுறுத்தக் கூடிய பவுலராக வளர்ந்து வந்தார். அதேபோல் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமான முகேஷ் குமார், இந்திய அணியின் முகமது ஷமிக்கு மாற்றாக உருவாகி வந்தார்.
வேகம் குறைவாக இருந்தாலும், அனுபவத்தை பெறும் போது அதனை சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென முகேஷ் குமார், ஆவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்களை நீக்கிவிட்டு கேகேஆர் அணிக்காக விளையாடிய ஹர்சித் ராணாவை இந்திய ஒருநாள் அணியில் தேர்வுக் குழு சேர்த்துள்ளது.
இதற்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி நிர்வாகம் சில பவுலர்கள் மீது செய்த முதலீடை பயிற்சியாளர் கம்பீர் ஒரேயொரு வீரரை கொண்டு மொத்தமாக மாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிய ஹர்சித் ராணா 13 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமல்லாமல் கவுதம் கம்பீரின் சொந்த மாநிலமான டெல்லியைச் சேர்ந்த வீரர் ஹர்சித் ராணா. இதனால் நீண்ட நாட்களாகவே ஹர்சித் ராணாவை கவுதம் கம்பீர் மனதில் வைத்து செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹர்சித் ராணா இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றால், மற்ற வீரர்கள் அவமரியாதை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.