துபாய்: இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நிசாங்காவை தேவையின்றி ஹர்சித் ராணா கோபமாக பார்த்து வம்புக்கு இழுத்த நிலையில், அடுத்த பந்திலேயே அவர் வீசிய பந்தை நிசாங்கா சிக்சருக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கொடுத்த ரியாக்சன் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதன்பின் 203 என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, நிசாங்காவின் அதிரடியான ஆட்டத்தை வெற்றிக்கு அருகில் வந்தது.

ஆனால் ஹர்சித் ராணா வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது, 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் டை-யில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், இந்திய அணி ஒரே பந்தில் 3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பவுலர்களின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் பும்ராவுக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டிருந்தார். கம்பீரின் தயவால் ஹர்சித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனிடையே ஹர்சித் ராணாவின் செயல்பாடுகள் மட்டுமல்லாமல் இலங்கை அணியின் நிசாங்காவுடன் அவர் தேவையின்றி மோதியது சோசியல் மீடியாவில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. 5வது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஹர்திக் ராணா, அந்த ஓவரின் முதல் பந்தை கொஞ்சன் பவுன்சராக வீசினார். அது நேராக நிசாங்காவின் ஹெல்மெட்டில் அடித்து சென்றது.
இதன்பின் 2வது பந்தை ஸ்லோயர் ஆஃப் கட்டராக வீசிய போது, நிசாங்கா அபாராமாக ஆடி பவுண்டரி அடித்தார். தொடர்ந்து 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இதையடுத்து 4வது பந்தை ராணா டாட் பாலாக வீசியதோடு, நிசாங்காவை வம்புக்கு இழுக்கும் விதமாக திரும்பி கோபத்துடன் பார்த்தார். இதனை நிசாங்காவும் கவனித்தார். இதனால் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அடுத்த பந்தை நிசாங்கா ஸ்கொயர் லெக் திசையில் சிக்சருக்கு பறக்கவிட, பயிற்சியாளர் ஜெயசூர்யா துள்ளிக் குதித்தார். மறுபுறம் கம்பீர், தனது கண்களில் கைகளை வைத்து மூடிக் கொண்டார். இதனால் இளம் வீரரான ஹர்சித் ராணா தேவையின்றி ஒரு வீரரிடம் சென்று வம்புக்கு இழுக்காமல் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.