“200 சதம் கூட அடிக்கலாம்.. ஆனா சச்சினை முந்த முடியாது” .. விராட் கோலியின் சாதனை.. கம்பீர் விளாசல்!
கவுகாத்தி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 200 சதங்களை அடித்தாலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தவே முடியாது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.
இலங்கை அணியுடனான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது விராட் கோலியின் சதம் எனக் கூறலாம். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் முதல்முறையாக கோலி சதத்தை பூர்த்தி செய்தார்.

சாதனை
இந்த சதத்தின் மூலம் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை முந்தினார். சச்சின் 8 சதங்களை அடித்திருந்த சூழலில், விராட் கோலி 9வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். இதே போல மற்றொரு சாதனைக்கு அருகிலும் சென்றுவிட்டார்.

காத்திருக்கும் சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி நேற்று இலங்கைக்கு எதிரான சதத்துடன் சேர்த்து 45 என்ற எண்ணிக்கையில் உள்ளார். இன்னும் 5 சதங்களை அடித்துவிட்டால் விராட் கோலி பிரமாண்ட சாதனையை தனதாக்குவார்.

கம்பீர் விளக்கம்
இந்நிலையில் கோலியால் சச்சினை முந்தவே முடியாது என கம்பீர் கூறியுள்ளார். அதில், விராட் கோலியுடையது சாதனையை பொறுத்தது அல்ல. நிச்சயமாக சச்சினின் சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் முறியடிப்பார் தான். இன்னும் பல சாதனைகளை கூடவும் அடிக்கலாம். ஆனால் அப்போது இருந்த விதிமுறைகள் வேறு, தற்போதுள்ள விதுமுறைகள் வேறு ஆகும்.

காரணம் என்ன
அப்போதைய காலத்தை இப்போதுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 2 புது பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது உள் வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள். எனவே கோலி பல சாதனைகளை படைத்தாலும் சச்சினுடன் ஒப்பிடவே முடியாது, முந்தவும் முடியாது என்பது போல கம்பீர் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications