கொழும்பு: இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற போது ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பை மட்டும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திலீப் இந்திய அணியின் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்ட பின், ஒவ்வொரு ஐசிசி போட்டியின் போது சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை வீரர்களுக்கு அளித்து வந்தார்.
அதேபோல் இருதரப்பு தொடர் என்றால், மொத்தமாக சிறந்த ஃபீல்டர் விருதினை அளித்து வந்தார். வீரர்களின் சின்னச்சின்ன பங்களிப்பை கூட மிஸ் செய்யாத திலீப்பின் பண்பு கம்பீருக்கு பிடித்தது. இதன் காரணமாகவே ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் கம்பீர் பயிற்சியின் கீழ் இலங்கை டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்த டி20 வழக்கம் போல் இந்திய அணியின் ஓய்வறையில் டி20 தொடரில் சிறந்த ஃபீல்டருக்கான விருதினை டி திலீப் அளித்தார். இந்த விருதுக்கான ரேஸில் இளம் வீரர்களான ரியான் பராக், ரவி பிஷ்னாய் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இணைந்த துணைப் பயிற்சியாளரான ரியான் டென்டஸ்காட்டே பதக்கத்தை அளிப்பார் என்று அறிவித்தார்.
இதன்பின் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பதக்கத்தை பெற்றுக் கொண்ட டெஸ்காட்டே, கடினமான மைதானத்தில் மழை அதிகமாக குறுக்கிட்ட போது ஃபீல்டிங்கில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். இந்த மூவரில் ரிங்கு சிங்கிற்கு பதக்கம் கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவரது கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் பதக்கத்தை அணிவித்த ரிங்கு சிங், அனைவருக்கும் நன்றி கூறி பயிற்சியாளர்களிடம் வாழ்த்து பெற்றார். இதன்பின் ஒலிம்பிக் வீரர்களை போல் பதக்கத்தை கடித்து போஸ் கொடுத்தார். பின்னர் கம்பீர் பேசுகையில், இதுபோன்ற போட்டிகளில் இருந்து தான் நாம் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் எதிர்காலத்தில் இப்படியான பிட்சில் பேட்டிங் செய்வதற்கு இப்போதிருந்த தயாராக வேண்டும்.
இல்லையென்றால் நிச்சயம் ஒருநாள் மாட்டிக் கொள்வோம். இந்த டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக அனைவரிடமும் என்ன எதிர்பார்த்தேனோ, அதனை தான் வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி வரை தோற்க மாட்டோம் என்று பிடிவாதமாக போராடினோம். அதனை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சில வீரர்களுக்கு ஒருநாள் தொடரில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஓய்வெடுக்கலாம். எந்த தவறும் இல்லை. ஆனால் ஓய்வு காலங்களிலும் ஃபிட்னஸ் உடன் இருங்கள். வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு தயாராக இருங்கள். நேரடியாக வந்து யாராலும் விளையாட முடியாது. ஃபிட்னஸ் விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.