மும்பை: டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணி வென்றதோடு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. இதன்பின் புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கவுதம் கம்பீர் சிறந்த வீரர் என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீர் எப்படி செயல்படுவார் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
ஏனென்றால் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட்டை போல் நீண்ட டெஸ்ட் அனுபவம் கொண்ட வீரர் கவுதம் கம்பீர் அல்ல. டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு, ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்தவர். சில டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை ஆடியிருந்தாலும், வெளிநாடுகளில் கம்பீர் சாதாரணமாக விக்கெட்டை பறிகொடுத்து செல்பவராகவே இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கம்பீர் எந்த கருத்தையும் முகத்திற்கு நேராக சொல்லக் கூடியவர் என்பதோடு, தனது மனதில் எழும் மாற்றங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். கவுதம் கம்பீரின் இந்த குணம், சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோருடன் ஒத்துப் போகுமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால் அனில் கும்ப்ளேவின் பிடிவாத குணத்தால் விராட் கோலி மோதலில் ஈடுபட்டது மிகப்பெரிய பிரச்சனையை இந்திய அணிக்குள் உருவாக்கியது. இந்த நிலையில் 2007 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய வீரர் ஜோகிந்தர் சர்மா கம்பீர் குறித்து பேசி இருக்கிறார். அதில், கம்பீர் தான் இப்போது இந்திய அணியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லும் பயிற்சியாளராக உள்ளார்.

ஆனால் கவுதம் கம்பீரால் அந்த பொறுப்பில் நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அனைத்து விஷயங்களிலும் கம்பீரிடம் ஒரு முடிவு இருக்கும். ஆனால் அந்த முடிவு வீரர்களுக்கு ஏற்றுக் கொள்ளபடியாக இருக்காது. நான் விராட் கோலியை பற்றி பேசவில்லை. ஏனென்றால் பல்வேறு சூழ்நிலைகளிலும் கம்பீரின் முடிவுகள் அப்படிதான் இருக்கும்.
அவரின் முடிவில் பலருக்கும் உடன்பாடு இருக்காது. யாராக இருந்தாலும், எந்த வீரராக இருந்தாலும் நேரடியாக முகத்திற்கு முன் கருத்து சொல்லக் கூடியவர் கவுதம் கம்பீர். ஆனால் கம்பீரின் செயல்பாடுகளில் 100 சதவிகிதம் நேர்மையும், உண்மையும், உழைப்பும் இருக்கும். இந்தியாவின் வெற்றிக்காக அனைத்தையும் செய்யக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.