கொழும்பு: இலங்கை அணி எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியை டை செய்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்விகளை சந்தித்து இருக்கிறது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்தியா ஆடும் முதல் ஒரு நாள் தொடர் இதுவாகும். இதற்கு முன் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளையும் இந்திய அணி வென்றதால் கவுதம் கம்பீர் சிறந்த பயிற்சியாளர் என அனைவரும் பேசி வந்தனர். ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் போன்ற அனுபவ வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியை அவர் சரியாக வழி நடத்தவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இந்த ஒரு நாள் தொடரில் அவரது பிடிவாதத்தால் செய்யப்பட்ட இரண்டு விஷயங்கள்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக, பேட்டிங்கில் இடது கை - வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதேபோல பந்து வீச்சில் முழு நேர பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பாமல் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக இரண்டு, மூன்று பேராவது அணியில் இடம் பெற வேண்டும் என்பதிலும் அவர் பிடிவாதமாக இருந்தார். இந்த இரண்டு பிடிவாதங்களும் இந்திய அணி வீரர்களை மனதளவில் பாதித்திருக்கலாம் எனவும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த தொடரில் வலது கை - இடது கை வீரர்கள் ஒரே நேரத்தில் ஆடுகளத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையில் சகட்டுமேனிக்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு நாள் தொடரின் மூன்று போட்டிகளில் எந்த ஒரு போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தாங்கள் இதற்கு முன் ஆடிய பேட்டிங் வரிசையில் ஆட வைக்கப்படவில்லை.
உதாரணத்திற்கு ஸ்ரேயாஸ் நான்காம் வரிசையிலும், கே எல் ராகுல் நான்கு அல்லது ஐந்தாம் வரிசையிலும் தான் இதுவரை பேட்டிங் செய்துள்ளனர். அந்த இடங்களில் அவர்கள் பேட்டிங் செய்யும்போது அதிக ரன்களும் குவித்து இருக்கின்றனர். ஆனால், இந்தத் தொடரில் அவர்கள் இருவரும் தங்களின் பேட்டிங் வரிசையில் விளையாடவில்லை. அதே போல, சிவம் துபே ஐந்தாம் வரிசை அல்லது ஆறாம் வரிசையில் இறங்கினால் ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவருக்கு ஒரு போட்டியில் நான்காம் வரிசையிலும், மற்ற இரண்டு போட்டிகளில் எட்டாவது வரிசையிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இரண்டு பேட்டிங் வரிசைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நான்காம் வரிசையில் இறங்கும் ஒருவர் சிலர் பவுண்டரிகளை அடித்து ஆடலாம். ஆனால், எட்டாம் வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன் பின்வரிசை வீரர்களை ஒருபுறம் வைத்துக் கொண்டு ரன் சேர்க்க வேண்டும் அல்லது களத்தில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனுக்கு ஒத்துழைப்பு அளித்து சிங்கிள் ரன்கள் ஓடி விளையாட வேண்டும்.
இது போன்ற பேட்டிங் சூழ்நிலை சிக்கல்களை புரிந்து கொள்ளாமல், பேட்ஸ்மேன்களின் மனநிலையை பற்றி எந்த கவலையும் இல்லாமல் கவுதம் கம்பீர் பேட்டிங் ஆர்டரை சகட்டுமேனிக்கு மாற்றியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டை மட்டுமே செய்த பின்பாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், கவுதம் கம்பீர் முதல் போட்டியின் முடிவை பார்த்த பிறகும் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளவில்லை.
அடுத்து பந்து வீச்சில் பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். முதல் போட்டியில் சுப்மன் கில் பகுதிநேர பந்து வீச்சாளராக ஒரே ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா பந்து வீசினார். அவர் கச்சிதமாக பந்து வீசியதால் தனது முடிவு சரிதான் என்று நினைத்த கவுதம் கம்பீர் மூன்றாவது போட்டியில் முழு நேர பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு ஆல் ரவுண்டரான ரியான் பராக்கை ஒரு நாள் அணியில் சேர்த்தார்.
மூன்றாவது போட்டியில் ரியான் பராக் 3 விக்கெட்களை வீழ்த்திய போதும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆக, மொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையும், பவுலிங் திட்டமும் இதற்கு முன்பு இருந்தது போல இப்போது இல்லை. பயிற்சியாளராக வந்தவுடன் இந்திய அணியை தான் சொல்லும் படி தான் நடக்க வேண்டும் என கவுதம் கம்பீர் கட்டாயப்படுத்துகிறாரோ? என்ற எண்ணமே ஏற்படுகிறது. இதை மாற்றிக் கொள்ளாவிட்டால் இனி இந்திய ஒரு நாள் அணி வெற்றிகளை குவிப்பது சந்தேகமே.