கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுடன் கவுதம் கம்பீர் தனது முதல் வலைப் பயிற்சியை தொடங்கினார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுடன் நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பதால் கவுதம் கம்பீர் என்ன செய்யப் போகிறார்? இந்திய வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
முதலில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. அதற்காக இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர்களை கூர்ந்து கவனித்த கவுதம் கம்பீர், அனைவரையும் அதிரடியாக ஆடுமாறு கூறியதாகவும், யாரும் தடுப்பாட்டம் ஆட வேண்டாம் என கூறியதாகவும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலர் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

இனி டி20 போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் தடுப்பாட்டம் ஆட வேண்டாம் எனவும், யாரும் நங்கூரம் போட்டு ஆட வேண்டாம் எனவும் அவர் மைதானத்தில் வீரர்கள் மத்தியில் பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், இந்திய அணியில் தற்போது ஒரு வீரர் மட்டுமே நிதானமாக ஆடும் குணம் கொண்டவராக இருக்கிறார்.
அது தற்போதைய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில். அவரை தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, சஞ்சு சாம்சன் என அனைவருமே அதிரடியாக ஆடும் குணம் கொண்டவர்கள் தான். பந்தை சரியாக அடிக்க முடியாமல் வேண்டுமானால் அவர்கள் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வாய்ப்பு உள்ளது. ஆனால், எப்போதும் நிதானமாக ஆட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க மாட்டார்கள்.
அந்த வகையில் கவுதம் கம்பீரின் முடிவு சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை அளித்திருக்கும். ஆனால், சுப்மன் கில் மட்டுமே இதில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பேட்டிங் முறைக்கு அதிரடி ஆட்டம் ஒத்து வருமா? என்ற சந்தேகமும் உள்ளது.
இந்த வலைப் பயிற்சியின் போது கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரருடனும் சில நிமிடங்கள் செலவிட்டார். அவர்களுக்கு சில ஆலோசனைகளை அளித்தார். அதேபோல புதிதாக இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் வீரர்கள் மத்தியில் பேசினார். அந்த வீடியோ காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.