மும்பை : இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதத்தை கொஞ்சம் கூட தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சாடி இருக்கிறார்.
ராகுல் டிராவிட் பதவியில் இருந்து விலகிய பிறகு, தற்போது புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்களும் விலகி இருக்கிறார்கள்.

இதன் மூலம் புதிய அத்தியாயத்தை நோக்கி இந்திய கிரிக்கெட் நகர்ந்து இருக்கின்றது. இந்த சூழலில் கம்பீர் பயிற்சியாளராக தலைமையேற்ற பிறகு முதல் முறையாக இலங்கைக்கு எதிரான தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்திய அணிகள் திறமை வாய்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் கம்பீர் அதனை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் விதமாக டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனி அணியும், டெஸ்ட் போட்டிக்கு தனி அணியும் உருவாக்க வேண்டும் என்று கம்பீர் பேசியிருந்தார்.
ஆனால் தற்போது ஒரே வீரர்களை மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் சேர்க்கும் நிலை கம்பிருடைய பதவி காலத்திலும் தொடர்கிறது. இந்த சூழலில் இலங்கைக்கு எதிரான தொடரில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இது கடும் விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ருதுராஜ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து பிசிசிஐ ஒரு பேட்டியை கூட தரவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சாஹல், அபிஷேக் ஷர்மா சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹர்பஜன் சிங் இந்த கருத்துக்கு பலரும் சரி என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் வீரர்கள் பி ஆர் ஏஜென்சி மூலம் தங்களுக்கு ஆதரவு இருப்பது போல் சமூக வலைத்தளத்தில் காட்டிக் கொள்வதாகவும், அப்படி செய்யும் நபர்களை தான் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.