மும்பை: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் நன்றாக ஆடி வந்த மூன்று வீரர்கள் இடம் பெறவில்லை என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது வரை அவர்கள் சிறப்பாக ஆடிய போதும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.
இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ள மூன்று போட்டிகள் கொண்டு ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான முன்னோட்டமாக இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் அமைய உள்ளது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒருநாள் அணியில் இடம் அளிக்காதது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நீண்ட காலமாக இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்த சஞ்சு சாம்சன், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சதம் அடித்திருந்தார். அதனால், அவருக்கு இந்திய ஒரு நாள் அணியில் இனி வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது.
இதனிடையே 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றார். இப்போதும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், அடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி என்ற முக்கியமான ஒருநாள் தொடருக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அடுத்து எந்த காரணமும் இன்றி யுஸ்வேந்திர சாஹல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு திடீரென 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டது. அவர் மீண்டும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்று நம்பிக்கை எழுந்தது. ஆனால், உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்காத சாஹல், அடுத்து நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும், இப்போது நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெறவில்லை.அவரை மீண்டும் பிசிசிஐ புறக்கணித்து இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்திருந்தார். அவருக்கு டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த மூன்று வீரர்களையும் சுட்டிக்காட்டி வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.