கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக புதிய பொறுப்பை ஏற்றுள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக புதிதாக பொறுப்பேற்ற கவுதம் கம்பீருக்கும் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பலரும் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்திருந்த போது, திடீரென காயத்தை காரணமாக கூறி பிசிசிஐ நிர்வாகம் அவரை ஒதுக்கியுள்ளது. அதேபோல் துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியாவை தூக்கியுள்ளது. ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு, இந்த விவகாரம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் கேப்டன்சி விவகாரத்தில் கவுதம் கம்பீரின் தலையீடும் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் எப்படி மும்பை அணிக்குள் ஹர்திக் பாண்டியா கேப்டனான போது, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஒத்துழைக்காமல் செயல்பட்டார்களோ, அதுபோல் இந்திய அணியிலும் நடக்குமோ என்று ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் கொழும்பு சென்றடைந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நட்பு பாராட்டியது தெரிய வந்துள்ளது. புதிதாக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவிற்கு ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் கேப்டன்சி இல்லையென்றாலும் சூர்யகுமார் யாதவால் தனக்கு எந்தவித பொறாமையும் இல்லை என்று ஹர்திக் பாண்டியா நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணியிலும் வீரர்களுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்திய அணியின் கேப்டன்சி தொடர்புடைய முடிவினை இந்திய வீரர்களிடம் ஆலோசிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய அணி வீரர்களின் ஆதரவும் சூர்யகுமார் யாதவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.