பாலக்கலே: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியா மனதளவில் சோகமடைந்ததாக கூறப்பட்டு வந்தன. இதற்கு பின் கவுதம் கம்பீர் மற்றும் மும்பை லாபி இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை டி20 தொடருக்கு வந்த போது சூர்யகுமார் யாதவை கட்டிப்பிடித்து ஹர்திக் பாண்டியா நட்பு பாராட்டினார். இதனால் இந்திய அணியின் ஓய்வறை சூழல் பாதிக்காது என்று ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பினார். இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடி வருகிறது. இலங்கை அணி முதல் பேட்டிங் செய்த நிலையில், 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பின் ஹர்திக் பாண்டியாவை பவுலிங் செய்வதற்காக கேப்டன் சூர்யகுமார் யாதவ் அழைத்து கையில் பந்தை கொடுத்தார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா மொத்தமாக 10 பந்துகளை வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக வீசிய 2 பந்துகளும் ஒய்டாக சென்றது. பின்னர் மீண்டும் 2வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்ட போது, 3வது பந்து மீண்டும் ஒய்டாக சென்றது.
பின்னர் 3வது பந்தில் குசால் பெரேரா சிக்ஸ் அடித்த நிலையில், 4வது பந்து மீண்டும் ஒய்டாகியது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் டென்ஷனாகினர். பின்னர் அடுத்த 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து வெளியில் வந்தார். இந்த ஓவரில் மட்டும் 10 பந்துகளை ஹர்திக் பாண்டியா வீசிய நிலையில், மொத்தமாக 15 ரன்கள் விளாசப்பட்டது.
இதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி பிடிக்காமல் தான் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கமாக வீசும் வேகத்திலும் ஹர்திக் பாண்டியா வீசாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பவுண்டரி எல்லை கூடுதலாக இருக்கும் திசையை பயன்படுத்த நினைத்து ஒய்டாக வீசியதும் தெரிய வந்தது.