கொழும்பு : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்புக்கு சூரிய குமார் யாதவ் வந்திருக்கிறார். இதற்கு ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் அடைகிறார் என்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக கௌதம் கம்பீர், அஜித் அகார்கர் கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸில் அர்னால்ட், ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்காதது தான் கேப்டன் மாற்றத்திற்கு வழி வகுத்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சூரியகுமார் மற்றும் ஹர்திக் என இருவருமே திறமை வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்படும்போது இருவருமே வித்தியாசமாக செயல்படுவார்கள். டி20 பொறுத்தவரை சூரியகுமார் தமக்கு தெரிந்த ஒரே வகையில் தான் விளையாடுவார்.
இதேபோன்று போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பதில் சூரியகுமார் தெளிவாக இருப்பார். ஹரிதிக்கும் இதே திறனை ஏற்கனவே காட்டியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவால் மற்ற வீரர்களின் மரியாதையை சம்பாதிக்க முடியவில்லை. ஹர்திக் தனிமையிலே இருந்தது போல் தெரிந்தது.
இதன் காரணமாக தான் பிசிசிஐ ஹர்திக்கை விட்டுவிட்டு சூரியகுமார் யாதவை அடுத்த கேப்டனாக நியமித்திருக்கலாம். ஒரு கேப்டனாக இருக்கும் நபர் அனைவரையும் ஒருங்கிணைத்து அணியை சரியான வழியில் வழிநடத்த வேண்டும். அணியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் வெற்றி என்ற ஒரு திசை நோக்கி அணி செல்லும். இதற்காக நான் சொன்னதெல்லாம் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடக்கவில்லை என அர்த்தம் கிடையாது. தற்போது சூரியகுமார் யாதவுக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அவர் சரியாக பயன்படுத்தி ஒரு கேப்டனாக தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும் என்று ரசில் அர்னால்ட் கூறியுள்ளார்.