மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில் தன்னை ஒருநாள் அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என ஹர்திக் பாண்டியா, பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜூலை 27 முதல் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்க உள்ளது. ஆகஸ்ட் 2 முதல் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் தொடர் துவங்க உள்ளது.

இதில் ஒரு நாள் தொடருக்கான அணியில் மட்டும் தன்னைத் தேர்வு செய்ய வேண்டாம் என ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ள இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இதில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.
கவுதம் கம்பீரை பொறுத்தவரை எந்த ஒரு வீரரும் முழு உடற் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் அணியில் இருந்து விலக்கு கேட்டு இருக்கிறார். கவுதம் கம்பீர் இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பது விரைவில் தெரியவரும்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடரில் அவர்கள் இடம் பெறுவார்களா? இல்லை இந்த தொடருக்கு மட்டும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்ற சந்தேகமும் உள்ளது. ரோஹித் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்றால், கே எல் ராகுல் இந்திய ஒருநாள் அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்படுவார்.